Last Updated : 07 Apr, 2020 01:50 PM

 

Published : 07 Apr 2020 01:50 PM
Last Updated : 07 Apr 2020 01:50 PM

தெரிந்துகொள்ளுங்கள்: கரோனா வதந்திகளைத் தடுக்க வாட்ஸ் அப் நிறுவனம் புதிய கட்டுப்பாடு

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி,

கரோனா வைரஸ் தொடர்பாக வாட்ஸ் அப்பில் வதந்திகள் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு வாட்ஸ் அப் நிறுவனம் புதிய கட்டுப்பாட்டைக் கொண்டு வந்துள்ளது.

சமூக வலைதளச் செயலிகளில் பிரதானமாக விளங்கும் வாட்ஸ் - அப், இந்தியாவில் பல கோடி பேரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தகவல் - தொழில்நுட்ப ரீதியில் அதில் பல்வேறு பயன்கள் இருந்தாலும், மறுபுறம் பல தவறான செய்திகள் அதன் வாயிலாகப் பரப்பப்படுகின்றன.

குழந்தை கடத்தும் கும்பல், பசு கடத்தல் கும்பல், கும்பல் தாக்குதல் போன்றவற்றில் வதந்திகள் பரவுவதை நம்பி பல்வேறு இடங்களில் அப்பாவி மக்கள் அடித்துக் கொல்லப்பட்டனர். இத்தகைய தவறான செய்திகள் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு வாட்ஸ் - அப் நிறுவனத்துக்கு ஏற்கெனவே மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது.

அதன் அடிப்படையில், ஒரே சமயத்தில் பலருக்கும் வதந்திகள் பரவுவதைத் தடுக்கும் வகையில், 5 நபர்களுக்கு மேல் ஒரு படம், செய்தி, வீடியோ உள்ளிட்டவற்றை ஃபார்வர்டு செய்யும் முறையை அறிமுகப்படுத்தியது. இந்த முறையால் வாட்ஸ் அப் மூலம் வந்திகள் பரவுவது 25 சதவீதம் குறைந்தது.

இந்நிலையில் கரோனா வைரஸ் பரவல் தொடங்கியதிலிருந்து பல்வேறு தவறான தகவல்களும், உண்மைக்கு மாறான விஷயங்களும் வாட்ஸ் அப்பில் பரப்பப்பட்டு வருகிறது. இந்த வதந்திகளையும், பொய்யான பிரச்சாரஙக்ளையும் தடுக்கும் வகையில் வாட்ஸ் அப் புதிய கட்டுப்பாட்டைக் கொண்டு வந்துள்ளது.

அதன்படி வாட்ஸ் அப்பில் ஒருவருக்கு வரும் செய்தி, படம், வீடியோ, வாய்ஸ் போன்றவை 5 நபர்களுக்கு ஒரே நேரத்தில் இப்போது ஃபார்வர்டு செய்ய முடியும். ஆனால், இனிமேல் வீடியோ, படம், செய்தி உள்ளிட்ட எதுவாக இருந்தாலும் ஏற்கெனவே அதிகமான முறை அதாவது 5 முறை அல்லது அதற்கும் அதிகமான முறை ஃபார்வர்டு செய்யப்பட்டிருந்தால் அவற்றை நாம் ஒருவருக்கு மட்டுமே ஃபார்வர்டு செய்ய முடியும் என்ற கட்டுப்பாட்டைக் கொண்டுவந்துள்ளது.

இது தவிர ஒரு செய்தி, படம் , வீடியோ அல்லது வாய்ஸ் எதுவாக இருந்தாலும் நமக்கு ஃபார்வர்டு என்ற பெயரில் வந்தால், அது எத்தனை பேரிடமிருந்து ஃபார்வர்டு செய்யப்பட்டு நமக்கு வந்துள்ளது என்ற எண்ணிக்கையையும் அறிய முடியும். இந்த வசதி தற்போது சோதனை முயற்சியில் இருப்பதால் விரைவில் அதுவும் நடைமுறைக்கு வரும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x