Last Updated : 07 Apr, 2020 08:33 AM

 

Published : 07 Apr 2020 08:33 AM
Last Updated : 07 Apr 2020 08:33 AM

அனைத்தையும் பிரதமர் அலுவலகம் மூலமே செய்வதைத் தவிர்க்க வேண்டும்; நிபுணர்களை அழையுங்கள்: ரகுராம் ராஜன் கட்டுரை

சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய நெருக்கடி என்று கரோனா வைரஸ் பரவலை வர்ணித்த முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன், அனைத்தையும் பிரதமர் அலுவலகத்திலிருந்தே செய்வது பெரிய அளவில் உதவாது, துறை சார்ந்த நிபுணர்களை அழையுங்கள், எதிர்க்கட்சியில் உள்ளவர்களயும் அழைத்து ஒருங்கிணைந்த முறையில் செயலாற்ற வேண்டும் என்று ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக தன் வலைப்பக்கத்தில் அவர் "Perhaps India's Greatest Challenge in Recent Times" (சமீப காலங்களில் இந்தியா சந்திக்கும் மிகப்பெரிய சவால்) என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் கூறியிருப்பதாவது:


“நிறைய செய்ய வேண்டியுள்ளது, அரசு இது தொடர்பான நிபுணர்களையும் நிரூபிக்கப்பட்ட திறன் கொண்டவர்களையும் அழைக்க வேண்டும். இந்தியாவில் நிறைய பேர் உள்ளனர். முந்தைய காலக்கட்டங்களில் இப்படிப்பட்ட நிகழ்வுகளில் பணியாற்றிய அனுபவம் உள்ள எதிர்க்கட்சியினரையும் கூட உதவிக்கு அழைக்கலாம் தவறில்லை.

ஆனால் மத்திய அரசு அனைத்தையும் இதே அதிக வேலை செய்து களைப்படைந்த நிலையில் பிரதமர் அலுவலகத்திலிருந்தே அனைத்தையும் செய்ய முடிவெடுப்பது பயன் தராது, அது நிவாரணத்தில் தாமதத்தையே ஏற்படுத்தும்.

2008-09 பொருளாதார சரிவு அல்லது நிதி நெருக்கடி ஒரு பெரிய தேவை அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆனால் நம் தொழிலாளர்கள் பணிக்குச் செல்ல முடிந்தது. நம் நிதி நிலைமையும் அரசு நிதி அமைப்பும் வலுவாக இருந்தன.

இவை அனைத்தும் இன்று இல்லாத நிலை உள்ளது. காரணம் நாம் கரோனா வைரஸ் லாக்-டவுனில் உள்ளோம்.

21 நாட்கள் லாக்-டவுன் என்பது முதற்கட்ட நடவடிக்கை, இதன் மூலம் தன் தயாரிப்புகளை மேம்படுத்த கால அவகாசம் இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது. கோவிட்-19 டெஸ்ட்களை அதிகரிக்க வேண்டும். இதன் மூலமே ஹாட்ஸ்பாட்கள் எங்கு உள்ளன என்பது பற்றிய தெளிவற்ற போக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

நாடு முழுதையும் முற்றிலும் லாக்-டவுன் என்று நீண்ட காலத்துக்கு வைத்திருக்க முடியாது. எனவே தொற்று பாதிப்பு அதிகம் இல்லாத பகுதிகளில் எச்சரிக்கையுடன் இயல்பு நிலை நடவடிக்கைகள் தொடர பரிசீலிக்க வேண்டியது அவசியம்.

நாட்டின் ஏழை மக்கள் மற்றும் சம்பளமில்லாத கீழ் நடுத்தர மக்கள் நீண்ட காலமாக வேலை செய்ய முடியாமல் போன நிலையில் இவர்கள் பிழைப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். நேரடியாக பணம் செலுத்தும் முறை பெரும்பாலானோருக்கு சென்றடையலாம் ஆனால் அனைவருக்கும் செல்லும் என்று கூற முடியாது. நிறைய நோக்கர்கள் நேரடி பணப் பரிமாற்றம் போதிய அளவுக்கு இல்லை என்றே கூறுகின்றனர்.

நாட்டின் வள ஆதாரங்களை இந்தக் காலக்கட்டங்களில் தேவை உள்ளவர்களுக்கு மட்டும் பயன்படுத்துவது அவசியம். இதுதான் மனிதாபிமான நாடு என்பதற்கான சரியான நடவடிக்கை. இதற்காக நம் பட்ஜெட் தடைகளை புறக்கணிக்க வேண்டும் எனறு பொருளல்ல. முன்னுரிமை எதற்கு அளிக்கப்பட வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.

முக்கியத்துவமற்ற செலவினங்களை அரசு முற்றிலும் தவிர்த்து உடனடித் தேவைகள் மீது கவனம் செலுத்த வேண்டும். அதே வேளையில் முதலீட்டாளர்களுக்கு உறுதி செய்யும் விதமாக தனித்துவமான நிதிக்குழு அமைப்பது, கேஎன்.சிங் கமிட்டி பரிந்துரைத்தது போல் இடைக்கால கடன் இலக்குகளை நிர்ணயிப்பது மூலம் அரசு தன் நிதித்துறை முன்னுரிமை அல்லது நேர்மையை தெளிவுபடுத்த வேண்டும்.

ஏற்கெனவே சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக சரிவைச் சந்தித்து வருகின்றன. அவர்கள் தங்களை தக்க வைத்துக் கொள்ள போதிய நிதி ஆதாரங்களின்றி இருப்பார்கள். நம்மிடம் உள்ள குறைந்த நிதி ஆதாரங்களைக் கொண்டு அனைவரையும் காப்பாற்ற முடியாது.

பெரிய நிறுவனங்கள் தங்கள் சப்ளையர்களான சிறு நிறுவனங்களுக்கு நிதி உதவி புரிய வேண்டும். வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பரஸ்பர நிதியங்கள் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதை ஊக்குவிக்க வேண்டும். மத்திய ரிசர்வ் வங்கி இத்தகைய செயல்பாடுகளைச் செய்ய ஆர்பிஐ சட்டம் மாற்றப்பட வேண்டும்.

மேலும் மத்திய அரசு தனது ஒவ்வொரு முகமைகளையும் பொதுத்துறை யூனிட்களையும் அதாவது மாநில அளவில் உள்ள யூனிட்கள் உட்பட தங்களது பில்களை உடனடியாகச் செலுத்துமாறு செய்ய வேண்டும். இதன் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு மதிப்புமிக்க நிதிப்புழக்கத்தை உறுதி செய்ய முடியும். நெருக்கடியில்தான் இந்தியா சீர்த்திருத்தம் செய்ய முடியும்.

வேறொரு வகையில், இந்த கடுமை குறையாத கரோனா துயரம் ஒரு சமூகமாக நாம் எந்த அளவுக்கு பலவீனப்பட்டுள்ளோம் என்பதை நமக்கு அறிவுறுத்தும் என்று நம்புவோம். எனவே நாம் நமக்கு முக்கியமாகத் தேவைப்படும் நம் பொருளாதார மற்றும் ஆரோக்கிய, சுகாதார சீர்த்திருத்தங்கள் மீது நம் அரசியல் கவனமேற்கொள்ள வேண்டும்” என்றார் ரகுராம் ராஜன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x