Published : 06 Apr 2020 06:27 PM
Last Updated : 06 Apr 2020 06:27 PM

ஊரடங்கு உத்தரவு தொடருமா? - மத்திய அமைச்சர் பதில்

ஊரடங்கு உத்தரவு தொடர்பாக மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை, சரியான நேரத்தில் இதுதொடர்பாக முடிவெடுக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் தொற்றை தடுத்து நிறுத்த அதிகமான அளவு நிதி தேவைப்படுவதால் இரண்டு ஆண்களுக்கு எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரை மையமாகக் கொண்டு பரவத் தொடங்கிய கரோனா வைரஸால் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் காணொலிக் காட்சி மூலம் இன்று நடந்தது. கரோனா தொற்று பரவாமல் தடுப்பது இதற்காக அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் மாநில அரசுகளுடன் இணைந்து கரோனா ஒழிப்பு பணியை மேற்கொள்வது பற்றியும் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசித்தார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:

கரோனா பரவலை தடுப்பதற்காக 21 நாட்கள் ஊடங்கு உத்தரவு அமலில் உள்ளது. நிலைமையை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. உலகம் முழுவதும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
சரியான நேரத்தில் இதுதொடர்பாக முடிவெடுக்கப்படும். அதன் பிறகே இதுபற்றி ஏதும் கூற முடியும். எந்த முடிவு எடுக்கப்பட்டாலும் அது மக்களின் நலன் கருதியே இருக்கும். நாட்டின் நலனை கருத்தில் கொண்டே அரசு முடிவெடுக்கும்.

இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x