Published : 06 Apr 2020 06:12 PM
Last Updated : 06 Apr 2020 06:12 PM

பிரதமர், அமைச்சர், எம்.பி.க்களுக்கு 30%  சம்பளம் குறைப்பு: கரோனா நிதிக்காக நடவடிக்கை

புதுடெல்லி

கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பெருமளவு நிதி தேவைப்படுவதால் பிரதமர், அமைச்சர்கள், எம்.பி.க்களின் சம்பளம் 30 சதவீதம் குறைக்கப்படுகிறது.

கரோனா வைரஸ் தொற்றை தடுத்து நிறுத்த அதிகமான அளவு நிதி தேவைப்படுவதால் இரண்டு ஆண்களுக்கு எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரை மையமாகக் கொண்டு பரவத் தொடங்கிய கரோனா வைரஸால் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கை தொடர்பாக மாநில முதல்வர்கள், அரசு அதிகாரிகள், மருத்துவ துறையினர் என பல தரப்பினருடன் பிரதமர் மோடி காணொலிக் காட்சி வசதி மூலம் உரையாடி வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் காணொலிக் காட்சி மூலம் இன்று நடந்தது. அவருடன் மூத்த அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷ உள்ளிட்டோரும் பங்கேற்றனர். வேறு சில அமைச்சர்கள் ஆங்காங்கே காணொலியில் இணைந்தனர்.

கரோனா தொற்று பரவாமல் தடுப்பது இதற்காக அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் மாநில அரசுகளுடன் இணைந்து கரோனா ஒழிப்பு பணியை மேற்கொள்வது பற்றியும் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசித்தார். இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:

கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பெருமளவு நிதி தேவைப்படுவதால் பிரதமர், அமைச்சர்கள், எம்.பி.க்களின் சம்பளம் 30 சதவீதம் குறைக்கப்படுகிறது.

இதேபோல் குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர் மற்றும் ஆளுநர்களின் சம்பளமும் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர்கள் சமூகப் பொறுப்பாக சம்பள குறைப்பு செய்ய முன் வந்துள்ளனர்.

இந்த பணம் இந்திய ஒருங்கிணைந்த நிதிக்கு செல்லும். சம்பள குறைப்பு நடைமுறை ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஓராண்டுக்கு இந்த திட்டம் அமலில் இருக்கும்.

இவ்வாறு ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x