Published : 06 Apr 2020 08:02 AM
Last Updated : 06 Apr 2020 08:02 AM

கரோனா பரவுவதைத் தடுக்க மத்திய அரசு புது திட்டம்; பாதிப்பு குறைவான பகுதிகளில் ஏப்ரல் 15-ல் ஊரடங்கை தளர்த்த வாய்ப்பு

கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளில், மேலும் வேகமாக பரவுவதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய திட்டத்தை வகுத்துள்ளது. இதன்படி பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் ஏப்ரல் 15-ல் ஊரடங்கு தளர்த்தப்பட வாய்ப்பு உள்ளது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக, கடந்த மார்ச் 25-ம் தேதி நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தபடுத்தப்பட்டது. இது வரும் 14-ம் தேதி முடிவடைய உள்ளது. இந்நிலையில், வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஊரடங்கு நீட்டிக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு புது திட்டத்தை வகுத்துள்ளது. இதன்படி, வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள கிராமங்கள், நகரங்கள் மற்றும் குறிப்பிட்ட பகுதிகளை ஏப்ரல் 14-ம் தேதிக்குப் பிறகும் தனிமைப்படுத்தவும் தீவிரமாக கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேநேரம், பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் ஏப்ரல் 14-க்குப் பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்பட மாட்டாது என கூறப்படுகிறது. இது தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ள 20 பக்கங்கள் அடங்கிய அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 2009-ம் ஆண்டு எச்1என்1 வைரஸ் பரவியது போலவே கரோனா வைரஸும் பரவி வருகிறது. எனவே, மக்கள் தொகை அதிகம் உள்ள நம் நாட்டில் இது வேகமாக பரவ வாய்ப்பு உள்ளது. அதேநேரம், அனைத்து பகுதியிலும் சமமாக பரவ வாய்ப்பு குறைவு. எனவே, ஒவ்வொரு பகுதியையும் வெவ்வெறு முறையில் அணுக வேண்டி உள்ளது. அதேநேரம், பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டி உள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பு பல மாநிலங்களில் அதிகமாக உள்ளது. குறிப்பாக, கேரளா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், டெல்லி, பஞ்சாப், கர்நாடகா, தெலங்கானா மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது. நாடு முழுவதும் 211 மாவட்டங்களில் கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. அங்கெல்லாம் இது மேலும் வேகமாக பரவ அதிக வாய்ப்பு உள்ளது.

எனவே, வைரஸ் வேகமாக பரவுவதைத் தடுக்க புதிய திட்டம் வகுக்கப்படும். குறிப்பாக வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் வசிக்கும் அனைவரும் 28 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுவர். வைரஸ் பரவும் வேகத்தைப் பொறுத்து இந்த காலம் நீட்டிக்கப்படலாம். கடைகளை திறப்பதற்கு நேரக் கட்டுப்பாடும் விதிக்கப்படலாம்.

இந்த திட்டத்தின்படி, குறிப்பிட்ட பகுதியை பிற பகுதிகளிலிருந்து துண்டித்தல், சமூக இடைவெளி, தீவிர கண்காணிப்பு, சந்தேகத்துக்குரிய நோயாளிகளுக்கு கரோனா பரிசோதனை செய்வது, அவர்களை தனிமைப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வாகனப் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்.

கரோனா வைரஸ் தொற்று சங்கிலி போல நீள்வதை உடைப்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். இதன்மூலம் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போர் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x