Last Updated : 05 Apr, 2020 07:04 AM

 

Published : 05 Apr 2020 07:04 AM
Last Updated : 05 Apr 2020 07:04 AM

டெல்லி மசூதிகளில் ஒளிந்திருக்கும் 900 வெளிநாட்டவரால் கரோனா பெருகும் அபாயம்

புதுடெல்லி

இஸ்திமாவுக்கு வந்த வெளிநாட்டவர்களில் 900 பேர் டெல்லியில்உள்ள மசூதிகளில் ஒளிந்திருப்பதாகக் கருதப்படுகிறது. இவர்களால் கரோனா வைரஸ் பெருகும் அபாயம் உள்ளதாக அஞ்சப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 1-ல் டெல்லியின் நிஜாமுதீனில் உள்ள மர்கஸ் காலி செய்யப்படுவதற்கு முன்னதாகவே ஜமாத் பிரச்சாரங்களுக்காக பல வெளிநாட்டவர் அங்கிருந்து கிளம்பி விட்டனர். டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள மசூதிகளில் இருந்தவர்கள், தற்போது வெளியில் வந்து அரசிடம்முன் பதிவு செய்ய அஞ்சுவதாகத் தெரிந்துள்ளது. இவர்களுக்கு அப்பகுதிவாசிகளில் சிலரும் அடைக்கலம் அளித்து உதவுவ தாகத் தெரிகிறது.

இது குறித்து ‘இந்து தமிழ்’நாளேட்டிடம் டெல்லி போலீஸ் அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, ‘இஸ்திமாவுக்கு வந்த வெளிநாட்டினர் மீது விசாக்களை தவறாக பயன்படுத்தியதற்காக உள்துறைஅமைச்சகம் நடவடிக்கை எடுத்துவருகிறது. இதற்கு அஞ்சி பலர் பல்வேறு மசூதிகளில் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. இது, மர்கஸில் இருந்து எங்களுக்கு கிடைத்த இஸ்திமா வருகைப் பதிவேட்டின்படி இன்னும் 900 வெளிநாட்டினர் கணக்கில் வரவில்லை. எனவே, அவர்களை ஜமாத் நிர்வாகிகள் உதவியுடன் தேடி முதலில் மருத்துவப் பரிசோதனை செய்வது அவசியமாக உள்ளது. ஏனெனில், இவர்களால் கரோனா ஆபத்து அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன’ எனத் தெரிவித்தன.

ஏப்ரல் 14 வரையிலான ஊரடங்கு உத்தரவால் டெல்லி நிஜாமுதீனில் உள்ள தப்லீக்-எ-ஜமாத்தின் மர்கஸில் சுமார் 2361 பேர் சிக்கியிருந்தனர். வெளிநாட்டவர் உள்ளிட்ட அவர்கள் அனைவரையும் மத்திய உள்துறை அமைச்சகம் தலையிட்டு காலி செய்திருந்தது. இவர்கள் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு உகந்தவகையில் மருத்துவமனை உள்ளிட்டப் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு பின் டெல்லியில் கரோனா பாதிப்பு 386 எனவும் அதில், மாநாட்டினர் 259 என்றும் அம்மாநில அரசு கூறி உள்ளது. இந்த எண்ணிக்கை, ஒளிந்திருக்கும் வெளிநாட்டினரால் அதிகரிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இவர்கள் உ.பி., பிஹார் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் ஒளிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது வழக்குகளும் பதிவாகி வருகின்றன.

இதனிடையே, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் பரிந்துரையை ஏற்று, மர்கஸின் முக்கிய நிர்வாகிகள் 7 பேர் மீது சி.ஆர்.பி.சியின் பிரிவு 91 –ன்படி வழக்குப் பதிவானது. இதற்கான நோட்டீசுக்கு அளிக்கப்பட்ட பதிலில், மர்கஸில் நிகழ்ந்த கரோனா பாதிப்பு எதேச்சையானதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதை. மர்கஸின் தலைமை நிர்வாகியான மவுலானா முகம்மது சாத்தின் சார்பில்அவரது மகனும் நிர்வாக உறுப்பினருமான முகம்மது யூசூப் சாத் அனுப்பியுள்ளார். இதில் இடம்பெற்ற தகவலாக ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கிடைத்திருப்பதாவது: இது ஒரு எதேச்சையான சம்பவம்.

ஊரடங்கு உத்தரவு வெளியானவுடன் இஸ்திமாவிற்கு வந்த வர்களில் பெரும்பாலானார்கள் அனுப்பப்பட்டு விட்டனர். வருகைதந்தவர்கள் அனைவரது பெயரும் பதிவேடுகளில் பதிவாகி உள்ளது. மர்கஸுக்கு சீல் வைக்கப்பட்டிருப்பதால் பெரும்பாலான நிர்வாகிகள் மருத்துவமனை உள்ளிட்டப் பல்வேறு இடங்களில் தனிமைக்கு உள்ளாகி விட்டனர். மர்கஸ் செயல்படத் துவங்கிய பின் தகுந்த ஆதாரங்களை அளிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அதிகாரிகள் வழக்கம்போல், நேற்றும் கரோனா புள்ளிவிரத்தை வெளியிட்டிருந்தனர். அதில், நாடு முழுவதிலும் கரோனா சிகிச்சைக்கு உள்ளனவர்களில் சுமார் 30 சதவிகிதமாக 1023 பேர் டெல்லியின் இஸ்திமாக்களில் கலந்து கொண்டவர்கள். இதே மாநாடுகளின் காரணமாக சுமார் 22,000பேர் கரோனோவிற்காக தனிமைப் படுத்தப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x