Published : 04 Apr 2020 07:23 PM
Last Updated : 04 Apr 2020 07:23 PM
கர்நாடகாவில் ஊரடங்கை மீறி வெளியே வந்தவர்களை யோகா செய்ய வலியுறுத்தி போலீஸார் தண்டனை வழங்கினர். பிரதமர் மோடி கூறியபடி விளக்கேற்ற மெழுகுவர்த்தியையும் அவர்கள் வழங்கினர்.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று அச்சம் காரணமாக கடைகளுக்கு மருந்து உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக வந்த மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வருகின்றனர்.
கடைகளுக்கு முன்பு உரிய வகையி்ல் மக்கள் இடைவெளி விட்டு நிற்கும் வகையில் வட்டங்கள் வரையப்பட்டுள்ளன. அந்த வட்டங்களில் வரிசைப்படி நின்று மக்கள் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டு ஸ்தலங்களும் மூடப்பட்டுள்ளன. எனினும் பல மாநிலங்களில் மக்கள், குறிப்பாக இளைஞர்கள் வீடுகளை விட்டு வெளியே சுற்றி திரியும் சம்பவங்கள் நடைபெறுகின்றன.
இளைஞர்கள் வெளியே சுற்றி திரியும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. அவ்வாறு வெளியே சுற்றித் திரிபவர்களுக்கு தோப்புக்கரணம் போடுதல் உள்ளிட்ட பல தண்டனைகளை போலீஸார் வழங்கி வருகின்றனர்.
இந்தநிலையில் கர்நாடக மாநிலம் கல்பருகியிலும் இளைஞர்கள் உள்ளிட்ட சிலர் விதிமுறைகளை மீறி வெளியே வந்த வண்ணம் உள்ளனர். இவ்வாறு வெளியே சுற்றித்திரிந்தவர்களை ஓரிடத்தில் சமூகவிலகலுடன் தனித்தனியாக அமர வைத்த போலீஸார் அவர்களை யோகா செய்யுமாறு கூறி தண்டனை வழங்கினர். தொடர்ந்து அவர்கள் யோகா செய்தனர். பின்னர் நாளை பிரதமர் மோடி அறிவித்துள்ளபடி விளக்கேற்றுவதற்காக அவர்களுக்கு இலவசமாக மெழுகுவர்த்திகளையும் போலீஸார் வழங்கினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT