Published : 04 Apr 2020 04:26 PM
Last Updated : 04 Apr 2020 04:26 PM

கரோனா வைரஸ் மட்டுமல்ல; மத வைரஸும் இருக்கிறது: உத்தவ் தாக்கரே விமர்சனம்

கரோனா வைரஸ் மட்டுமல்ல, மத வைரஸும் இருக்கிறது, ஆனால் கரோனா வைரஸுக்கு மதமில்லை என மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லீக் ஜமாத் சர்வதேச அலுவலகத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் நடந்த மத வழிபாடு மாநாட்டில் 250-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் உள்பட 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாகக் கூறப்பட்டது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் நாட்டில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட பின்பும் இவர்கள் தப்லீக் ஜமாத்தில் தங்கி இருந்தது கண்டு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது, நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் ஏராளமான கரோனா நோயாளிகள் இங்கு இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அவர்கள் அனைவரும் டெல்லியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தப்லீக் ஜமாத் இமாம் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலும் தப்லீக் மாநாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது.

இந்தநிலையில் இதுபற்றி மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

டெல்லி, மகாராஷ்டிராவில் என்ன நடந்தது என்று நாம் தெரிந்து கொள்ளவில்லை. தப்லீ்க் மாநாடு நடத்த முன்பு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. நிலைமை மோசமடைந்ததால் வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது. மகாராஷ்டிராவில் இருந்து டெல்லி சென்று வந்தவர்களை அதிகாரிகள் அடையாளம் கண்டு அவர்களுக்கு சோதனை நடத்தி வருகின்றனர்.

கரோனா வைரஸ் மட்டுமல்ல, மத வைரஸும் இருக்கிறது. மகாராஷ்டிராவில் மக்களிடம் தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சிலர் தவறான கருத்தை பதிவிட்டு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். நசைச்சுவை என்ற பெயரில் இதுபோன்ற அத்மீறல்கள் நடந்தாலும் ஏற்க முடியாது. கரோனா வைரஸுக்கு மதமில்லை. இதனை அனைவரும் உணர வேண்டும்.
இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x