Published : 04 Apr 2020 03:51 PM
Last Updated : 04 Apr 2020 03:51 PM

விளக்கு ஏற்றும் முன்பு ஆல்கஹால் சானிட்டைசர்ஸ் பயன்படுத்த வேண்டாம்: ராணுவம் வலியுறுத்தல்

புதுடெல்லி

பிரதமர் மோடி கூறியபடி விளக்கு அல்லது மெழுகுவர்த்தி ஏற்றும்போது பொதுமக்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும், முன்னதாக ஆல்கஹால் சார்ந்த சானிடைசர்ஸ் பயன்படுத்தி கைகழுவ வேண்டாம் என இந்திய ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் 21நாட்கள் ஊரடங்கு நாடுமுழுவதும் கடந்த 25-ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இன்று ஊரடங்கு உத்தரவில் 9-வது நாளை மக்கள் எட்டியுள்ளார்கள். கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மக்களில் பெரும்பான்மையினர் ஊரடங்கு உத்தரவுக்கு கட்டுப்பட்டு வீட்டில் இருக்கின்றனர்

இந்த சூழலில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வீடியோ பதிவு மூலம் உரையாற்றினார். அதில் அவர் பேசுகையில் ‘‘கரோனாவுக்கு எதிரான போரில் இந்த தேசம் ஆழ்ந்த ஒற்றுமையுடன் இருப்பதை நம்பமுடிகிறது

கரோனாவால் உருவான இருளை நாம் நம்பிக்கை எனும் ஒளி மூலம் அகற்ற வேண்டும். வரும் ஞாயிற்றுக்கிழமை(5-ம் தேதி) இரவு 9 மணிக்கு அனைத்து மக்களும் தங்கள் வீடுகளில் விளக்குகள் அனைத்தையும் 9 நிமிடங்கள் அணைத்து இந்தியர்களின் வலிமையை வெளிப்படுத்த வேண்டும்.

அந்த நேரத்தில் வீட்டில் வாசலில் அல்லது பால்கணி பகுதியில் விளக்கு ஏற்றியோ, மெழுகு வர்த்தி ஏற்றியோ, டார்ச்லைட், செல்போன் லைட்டை ஒளிவர விட்டு, சக மக்கள் குறித்து சிந்திக்க வேண்டும். விளக்கு ஏற்றும் போது மக்கள் அனைவரும் சமூக விலக்கலைக் கடைபிடிக்க வேண்டும்.’’ என கூறியிருந்தார்.

இதுபற்றி எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்தநிலையில் அவ்வாறு ஒருவர் விளக்கு அல்லது மெழுகுவர்த்தி ஏற்றும்போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து ராணுவம் தரப்பில் கூறுகையில் ‘‘பிரதமர் மோடி கூறியபடி விளக்கு அல்லது மெழுகுவர்த்தி ஏற்றும்போது பொதுமக்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும், முன்னதாக ஆல்கஹால் சார்ந்த சானிடைசர்ஸ் பயன்படுத்தி கைகழுவ வேண்டாம். ஏற்கெனவே ஆல்கஹால் சார்ந்த சானிடைசர்ஸ் பயன்படுத்தி விட்டு உடனடியாக சமையலறைக்கு சென்று அடுப்பை பற்ற வைத்தால் கைகளில் தீ பிடிக்கும் ஆபத்து இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

எனவே இதனை பொதுமக்கள் கவனத்துடன் கையாள வேண்டும். விளக்கு ஏற்றுவதற்கு முன்பாக எக்காரணத்தை முன்னிட்டும் ஆல்கஹால் சார்ந்த சானிடைசர்ஸ் பயன்படுத்த வேண்டாம். அதேசமயம் சாதாரண சோப்பு பயன்படுத்தி கைகழுவலாம்’’ எனத் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x