Published : 04 Apr 2020 01:42 PM
Last Updated : 04 Apr 2020 01:42 PM

‘‘அரசுக்கு ஒத்துழைக்கும் பகுஜன் சமாஜ் கட்சி’’ - மாயாவதிக்கு யோகி ஆதித்யநாத் திடீர் பாராட்டு

கரோனா தடுப்பு நடவடிக்கை பணியில் உத்தர பிரதேச அரசுக்கு பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்களும், நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அறிவித்த மாயாவதிக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று அச்சம் காரணமாக கடைகளுக்கு மருந்து உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக வந்த மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வருகின்றனர்.

கடைகளுக்கு முன்பு உரிய வகையி்ல் மக்கள் இடைவெளி விட்டு நிற்கும் வகையில் வட்டங்கள் வரையப்பட்டு இருந்தன. அந்த வட்டங்களில் வரிசைப்படி நின்று மக்கள் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டு ஸ்தலங்களும் மூடப்பட்டுள்ளன. கரோனா பரவுவது வேகமாக அதிகரித்து வருவதால் பெருமளவு மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

இருப்பினும் இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கரோனா தடுப்பு பணியில் பல்வேறு மாநில அரசுகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. உ.பி.யிலும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயரும் நிலையில் அங்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ள உத்தர பிரதேச அரசுக்கு பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்களும், நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அக்கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்து இருந்தார். இதற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் lநன்றியும், பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘உலகம் முழுவதுமே கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது. உத்தர பிரதேச அரசும் பெரும் பணியாற்றி வருகிறது. இந்த சமயத்தில் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மாநில அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாயாவதி அறிவித்துள்ளது சரியான நடவடிக்கை. இக்கட்டான தருணத்தில் மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படும் மாயாவதிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x