

லாக்-டவுன் காரணமாக கேரளாவில் சிக்கியிருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 112 பேர் இன்று காலை கொச்சி விமான நிலையத்திலிருந்து சிறப்பு ஏர் இந்தியா விமானம் மூலம் பாரீஸ் புறப்பட்டுச் சென்றனர்.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பேரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 2902 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 68. கேரளாவில் இதுவரை 295 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரோனா வைரஸ் இந்தியாவுக்குள் வந்தபோது அது கேரளா வழியாக வந்தது. இந்தியாவின் முதல் கரோனா நோயாளி கடந்த ஜனவரி 30-ம் தேதி அன்று கேரள மாநிலத்தில் கண்டறியப்பட்டார். அவர் வெகுவிரைவிலேயே கரோனாவிலிருந்து குணமானார். எர்ணாகுளத்தின் மட்டஞ்சேரியைச் சேர்ந்த 69 வயதான ஒருவர் உயிரிழந்ததுதான் கேரளாவின் முதல் கரோனா உயிரிழப்பு. அவர் மத்தியக் கிழக்கு நாடுகளின் வழியே கேரளாவை வந்தடைந்ததால் அவருக்கு இந்நோய் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது கேரளாவுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை அதிகம் ஆகும். கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட பிறகு, கேரளாவுக்கு எவ்வளவு வெளிநாட்டுப் பயணிகள் வந்தாலும் முதல் வேலையாக அவர்கள் 28 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.
மத்திய அரசு வழிகாட்டுதல்படி வெளிநாட்டவர்கள் தனிமைப்படுத்தப்படுவதற்கான விதிகளில் 14 நாட்கள் என்று இருந்தபோதும் கேரள அரசு 28 நாள் தனிமை என்பதைக் கட்டாயமாக வைத்துள்ளது.
கேரளாவுக்கு வருகை தந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 112 பேர் ஊரடங்கு காரணமாக அங்கேயே சிக்கிக்கொண்டனர். இந்நிலையில் இன்று காலை கொச்சி விமான நிலையத்திலிருந்து சிறப்பு ஏர் இந்தியா விமானம் மூலம் பாரீஸ் சென்றனர். அவர்களுக்கு ஏற்கெனவே செய்யப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. எனினும் இன்று நாடு திரும்பும்போது விமான நிலையத்தின் விதிகளின்படி அவர்களுக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அவர்களது உடமைப் பொருட்களுக்கும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டன. அதன் பிறகு அவர்கள் இந்தியாவின் சார்பில் பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு ஏர் இந்தியா விமானம் மூலம் பாரீஸ் புறப்பட்டுச் சென்றனர்.