Last Updated : 04 Apr, 2020 11:33 AM

 

Published : 04 Apr 2020 11:33 AM
Last Updated : 04 Apr 2020 11:33 AM

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,902 ஆக அதிகரிப்பு; 68 உயிரிழப்புகள்: ஒரே நாளில் 300-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

இந்தியாவில் கரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஒரே நாளில் 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதால், எண்ணிக்கை 2 ஆயிரத்து 902 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு 68 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் 2 ஆயிரத்து 650 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 183 பேர் குணமடைந்தும் சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட விவரங்கள்:

''கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் ஒரே நாளில் 6 பேர் அதிகரித்துள்ளனர். மகாராஷ்டிராவில் 3 பேர், டெல்லியில் இருவர், குஜாராத்தில் ஒருவர் இறந்துள்ளனர்.

இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். அதைத் தொடர்ந்து குஜராத்தில் 9 பேரும், தெலங்கானாவில் 7 பேரும், மத்தியப் பிரதேசம், டெல்லியில் தலா 6 பேரும், பஞ்சாப்பில் 5 பேரும், கர்நாடகா, மேற்கு வங்கத்தில் தலா 3 பேரும், ஜம்மு காஷ்மீர், உத்தரப் பிரதேசம், கேரளாவில் தலா 2 பேரும் உயிரிழந்துள்ளனர். ஆந்திரா, தமிழகம், பிஹார், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக கரோனாவுக்கு 2,902 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 55 பேர் வெளிநாட்டினர். இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 423 பேரும், தமிழகத்தில் 411 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 386 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் 295 பேரும், ராஜஸ்தான் மாநிலத்தில் 179 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் 161 பேரும், தெலங்கானாவில் 158 பேரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் 128 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 104 பேரும், குஜாராத் மாநிலத்தில் 95 பேரும், ஜம்மு காஷ்மீரில் 75 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் 63 பேரும், பஞ்சாப்பில் 53 பேரும், ஹரியாணாவில் 49 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுளளனர்.

பிஹாரில் 29 பேர், சண்டிகரில் 18 பேர், உத்தரகாண்ட்டில் 16 பேர், லடாக்கில் 14 பேர் கரோனாவால் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அந்தமான் நிகோபர் தீவுகளில் 10 பேரும், சத்தீஸ்கரில் 9 பேரும், இமாச்சலப் பிரதேசத்தில் 6 பேரும், ஒடிசா, புதுச்சேரியில் தலா 5 பேரும் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜார்க்கண்ட், மணிப்பூரில் தலா 2 பேரும், மிசோரம், அருணாச்சலப் பிரதேச மாநிலங்களில் தலா ஒருவரும் கரோனாவில் நோயில் சிக்கியுள்ளனர்''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x