Last Updated : 03 Apr, 2020 05:33 PM

 

Published : 03 Apr 2020 05:33 PM
Last Updated : 03 Apr 2020 05:33 PM

டெல்லி நிஜாமுதீன் தப்லீக் ஜமாத் மாநாடு நடத்தியவர்கள் மீது சிவசேனா விமர்சனம்

சிவசேனா தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே : கோப்புப்படம்

மும்பை

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவும் ஆபத்து இருந்த நிலையில், டெல்லி நிஜாமுதீன் பகுதியில் தப்லீக் ஜமாத் சார்பில் ஆயிரக்கணக்கான மக்களைக் கூட்டி மாநாடு நடத்தியது மனிதநேயமற்றது என்று சிவசேனா கட்சி விமர்சித்துள்ளது.

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லீக் ஜமாத் சார்பில் இந்த மாதத் தொடக்கத்தில் நடந்த மாநாட்டில் 9 ஆயிரம் பேர் வரை பங்கேற்றனர். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இவர்களுக்கு கரோனா அறிகுறி இருக்கலாம் என்பதால், அவர்களைத் தேடும் பணியில் மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் சிவசேனா கட்சி தனது அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் நிஜாமுதீனில் நடத்தப்பட்ட தப்லீக் மாநாட்டை விமர்சித்துள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளாவது:

''இஸ்லாத் பெயரில் முஸ்லிம்கள் மாநாடு நடத்தி நாட்டுக்கும், மதத்துக்கும் என்ன சேவை செய்திருக்கிறார்கள். அவர்கள் செய்தது மனிதநேயமற்றது, அவமதிப்பு. மிகப்பெரிய இஸ்லாமிய நாடுகளே தங்கள் மக்களிடம் வீட்டில் இருந்தவாறு நமாஸ் செய்து கொள்ளுங்கள் எனத் தெரிவித்துவிட்டது. மெக்கா, மெதினா கூட கரோனா வைரஸால் மூடப்பட்டுள்ளது.

ஆனால், நிஜாமுதீன் மாநாட்டுக்குப் பின்புதான் நாட்டில் கரோனா வைரஸ் பரவுவது குறித்த கவலை அதிகரித்துள்ளது. 22 மாநிலங்கள், 8 நாடுகளில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் 5 ஆயிரம் பேரில் 2 ஆயிரம் பேர் வெளிநாட்டவர்கள்.

இதில் 380 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அடிப்படை வாதிகளின் அகங்காரம் மற்றும் மன்னிக்க முடியாத கவனக்குறைவைத் தவிர வேறேதும் இல்லை.

மாநாடு நடத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாக டெல்லி போலீஸார் தெரிவிக்கிறார்கள். லாக்-டவுன் நேரத்தில் ஜமாத்தில் இருந்தவர்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல போலீஸார் பாஸ் அளிக்கவில்லை என ஜமாத் நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.

இதில் யார் சொல்வதில் உண்மை இருக்கிறது என்று இருவருக்கு மட்டுமே தெரியும். டெல்லி தேர்தலுக்குப் பின் ஷாகின் பாக் போரட்டத்தை போலீஸார் அகற்றியதுபோலவே இந்த மாநாட்டையும் நிறுத்தி இருக்கலாம்.

இது தேசத்தின் சுகாதாரம் தொடர்பானது. மதம் தொடர்பானது அல்ல.. லாக்-டவுனை அத்துமீறுவது மற்றவர்களின் வாழ்க்கையில் விளையாடுவது போன்றதாகும்''.

இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x