Published : 03 Apr 2020 08:16 AM
Last Updated : 03 Apr 2020 08:16 AM

டெல்லி சந்தைகளில் நெருக்கமாக கூடும் பொதுமக்கள்: அதிகரிக்கும் கரோனா ஆபத்து

‘இந்து தமிழ்’ நாளிதழிடம் டெல்லியில் உள்ள ஆசாத்பூர் காய்கறி மற்றும் பழ வியாபாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஹர்வீர்சிங் கூறியதாவது:

கரோனா பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நம் சந்தையில் அதிகம் இல்லை. இதனால், இங்குவரும் பொதுமக்கள் வழக்கம்போல் நெருக்கமாகவே உலவுகின்றனர். இதனால், சந்தையின் ஊழியர்களுக்கும் கரோனா வைரஸ் பரவும் ஆபத்து உள்ளது. இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.

மிகப்பெரிய சந்தை

ஆசியாவின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றான ஆசாத்பூரில், டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற நகரங்களில் உள்ள சில்லறை வியாபாரிகள் காய்கறிகளை வாங்கிச் செல்வது உண்டு. அவர்களில் பலரும் கடைகள், தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு ஊரடங்கு காரணமாக அதிக நேரம் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவதில்லை.

இதுகுறித்து ஆசாத்பூர் காய்கறி, பழங்கள் வியாபாரிகள் சங்கத்தின் முன்னாள் நிர்வாகியான ராஜேந்தர் சர்மா கூறியதாவது:

வெளிமாநிலங்களில் இருந்து வரும் காய்கறி, பழங்களின் வரத்து இரு தினங்கள் வரை குறையவில்லை. எனினும், அதன் விற்பனை சரிந்து விலைகள் குறைந்துள்ளன. அதேசமயம், சில்லறை வியாபாரிகள் அதிக விலைக்கு விற்கின்றனர். இதனால், நேற்று முதல் காய்கறி, பழங்கள் வரத்து பாதிக்கும் மேல் குறைந்துவிட்டது. இதன் தாக்கமாக நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும் என அவர் தெரிவித்தார்.

ஆசாத்பூருக்கு வழக்கமான 70 லாரிகளில் வந்த காய்கறி 20 ஆகவும், 80 லாரிகளில் வந்திருந்த உருளைக்கிழங்கு 25 ஆகவும் குறைந்துள்ளது. அதேபோல், பழங்கள் வரவும் வெகுவாகக் குறைந்து விட்டன. இதனால், சந்தையின் வேலை நாட்களை ஊரடங்கு முடியும் வரை குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x