Published : 02 Apr 2020 07:29 PM
Last Updated : 02 Apr 2020 07:29 PM

கரோனா ஆலோசனை; உத்தவ் தாக்கரே கூறிய யோசனை: ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி

கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கூறிய பரிந்துரையை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார்.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரை மையமாகக் கொண்டு பரவத் தொடங்கிய கரோனா வைரஸால் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு நாடு முழுவதும் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து முதல்வர்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின்போது கரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுப்பது எப்படி, டெல்லியில் நடைபெற்ற முஸ்லிம்களின் தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டவர்களை தனிமைப்படுத்தி கண்காணிப்பது உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

இதுமட்டுமின்றி அத்தியாவசிய பொருட்கள், மருந்துப் பொருட்கள் கையிருப்பு குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அப்போது மாநில முதல்வர்களிடம் பிரதமர் மோடி ஊரடங்கு தற்போது அமலில் உள்ள நிலையில் அதன் பிறகு நிலைமையை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து விவாதித்துள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பேசுகையில் ‘‘ஒவ்வொரு மாநில முதல்வர்களும் தங்கள் மாநிலத்தில் உள்ள மதத் தலைவர்களுடன் பேச வேண்டும். மதத் தலைவர்கள் தங்கள் சமூக மக்களிடம் சமூக விலக்கலை மக்கள் சரியாக முறையில் பின்பற்றுமாறு அறிவுரை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ள வேண்டும், அதுபோலவே மதக் கூட்டங்களை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்ள வேண்டும்’’ என பரிந்துரைத்தார்.

பிரதமர் மோடி உடனடியாக இந்த ஆலோசனையை ஏற்றுக் கொண்டார். இதுபோலேவே ஊடரங்கு காரணமாக வீட்டுக்குள் இருக்கும் மக்கள் உடல்நலம் மட்டுமின்றி மனநலத்துடன் இருப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தவ் தாக்கரே பரிந்துரைத்தார். இதையும் ஏற்றுக் கொள்வதாக பிரதமர் மோடி பரிந்துரைத்தார்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x