Published : 02 Apr 2020 04:28 PM
Last Updated : 02 Apr 2020 04:28 PM

ஊரடங்கிற்கு பிறகும் கரோனா தடுப்பு நடவடிக்கை தொடரும்? - முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை 

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு தற்போது அமலில் உள்ள நிலையில் அதன் பிறகு நிலைமையை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரை மையமாகக் கொண்டு பரவத் தொடங்கிய கரோனா வைரஸால் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு நாடு முழுவதும் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து முதல்வர்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின்போது கரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுப்பது எப்படி, டெல்லியில் நடைபெற்ற முஸ்லிம்களின் தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டவர்களை தனிமைப்படுத்தி கண்காணிப்பது உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

இதுமட்டுமின்றி அத்தியாவசிய பொருட்கள், மருந்துப் பொருட்கள் கையிருப்பு குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அப்போது மாநில முதல்வர்களிடம் பிரதமர் மோடி ஊரடங்கு தற்போது அமலில் உள்ள நிலையில் அதன் பிறகு நிலைமையை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து விவாதித்துள்ளார்.

ஊரடங்கு முடிந்த உடன் முழுமையாக பழையபடி இயல்பு வாழ்க்கைக்கு செல்வது கரோனா பரவலை மீண்டும் ஊக்குவிக்க வாய்ப்பு இருப்பதாக விவாதிக்கப்பட்டது.

இதனால் ஊரடங்கு முடிவுக்கு வந்தாலும் கரோனா பரிசோதனை, தொற்று உள்ளவர்களை கண்டறிதல், தனிமைப்படுத்துதுல், மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தல் போன்றவை அடுத்த சில வாரங்களுக்கு மிகவும் அவசியம் என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

ஊரடங்கு காலத்திற்கு பிறகும் கரோனா பரவாமல் தடுக்க இந்த நடவடிக்கைகள் மிகவும் அவசியம் என்பதை பிரதமர் மோடி எடுத்துக் கூறினார். அதற்கு ஏற்றபடி மாநிலங்கள் திட்டமிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x