

தனிமைப்படுத்தி வைக்கப்பட்டவர்கள் மொபைல் போன் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகிறது. இதைத் தடுக்கும் முயற்சியில் மக்களை வீடுகளில் தனிமைப்படுத்தவும், சமூக இடைவெளியை உருவாக்கவும் 21 நாட்கள் ஊரடங்கை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் நாளுக்கு நாள் மக்கள் கரோனாவால் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள்.
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுவோர், அறிகுறிகளுடன் கண்காணிப்பில் இருப்போர் அதிகரித்து வருகின்றனர்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இதுகுறித்து இன்று கூறுகையில் ‘‘கரோனா வைரஸ் இந்தியாவில் சமூக பரவலாக இதுவரை மாறி விட்டதாக மத்திய அரசு தெரிவிக்கவில்லை. எனினும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டவர்கள் மொபைல் போன் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 11 ஆயிரம் பேரின் மொபைல் எண்கள் ஏற்கெனவே டெல்லி காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தற்போது மேலும் 14 ஆயிரம் மொபைல் எண்களை இன்று வழங்கியுள்ளோம். வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளவர்கள் வெளியே வரக்கூடாது. மீறி வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என் கூறினார்.