Published : 01 Apr 2020 12:18 PM
Last Updated : 01 Apr 2020 12:18 PM

டெல்லி மாநாட்டில் பங்கேற்றதாக தவறான தகவலை பரப்புவதா? - ஆந்திர துணை முதல்வர் கண்டனம்

அம்ஜத் பாஷா- கோப்புப் படம்

அமராவதி

டெல்லியில் நடந்த தப்லிக் மாநாட்டில் நான் கலந்து கொண்டதாக சில குறிப்பிட்ட ஊடகங்கள் திட்டமிட்டு தவறான தகவல்களை பரப்புவதாக ஆந்திர துணை முதல்வர் அம்ஜத் பாஷா கண்டித்துள்ளார்.

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிக் ஜமாத் சர்வதேச அலுவலகத்தில் இந்த மாதம் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை மத வழிபாடு மாநாடும் தப்லிக் ஜமாத் சார்பில் நடந்தது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும், வெளிநாடுகளில் இருந்து 250-க்கு மேற்பட்டோரும் இதில் பங்கேற்றனர். ஒட்டுமொத்தமாக 8 ஆயிரம் பேர் வரை வந்து சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்தநிலையில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் நாட்டில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. கடந்த 24-ம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துவிட்டது.

கரோனா வைரஸைத் தடுக்க சமூக விலக்கல் தேவை என்பதால், மத்திய அரசு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து மக்கள் வீட்டுக்குள்ளே இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

அப்போதே அனைத்து தங்கும் விடுதிகள், உணவகங்கள், விருந்தினர் இல்லம், விடுதிகள் போன்றவற்றின் உரிமையாளர்கள் கூட்டம் கூடவிடாமல், சமூக விலக்கலைப் பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இந்தநிலையில் நிஜாமுதீன் மர்காஸ் கட்டிடத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்றாகக் கூடியிருந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை ஒரே இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏராளமான கரோனா நோயாளிகள் இங்கு இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்றுச் சென்றவர்களில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் போது ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைக் கூட்டி மாநாடு நடத்திய நிஜாமுதீன் மர்காஸ் மவுலானா சாத் கந்தால்வி மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அந்த கட்டிடத்தில் தங்கியிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களையும் மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்துதல் மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் ஆந்திர முதல்வர் அம்ஜத் பாஷா டெல்லியில் நடந்த தப்லிக் மாநாட்டில் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதனை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

டெல்லியில் நடந்த தப்லிக் மாநாட்டில் கலந்து கொண்டதாக சில குறிப்பிட்ட ஊடகங்கள் திட்டமிட்டு தவறான தகவல்களை பரப்புகின்றன. இதில் துளியும் உண்மையில்லை. ஆந்திராவில் இஸ்லாமிய மக்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இதுதொடர்பான விசாரணக்காக தான் நான் டெல்லி சென்றேன். ஆனால் நான் தப்லிக் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.’’ எனக் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x