Published : 31 Mar 2020 07:11 PM
Last Updated : 31 Mar 2020 07:11 PM
டெல்லி தப்லிக் ஜமாத் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இங்கிருந்து நாட்டின் பல மாநிலங்களுக்கு சென்றுள்ளனர், இதனால் எத்தனை மக்கள் பாதிக்கப்படுவார்களோ, இதை நினைத்தாலே எனக்கு அச்சமாக உள்ளது என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.
டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிக் ஜமாத் சர்வதேச அலுவலகத்தில் இந்த மாதம் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை மத வழிபாடு மாநாடும் தப்லிக் ஜமாத் சார்பில் நடந்தது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும், வெளிநாடுகளில் இருந்து 250-க்கு மேற்பட்டோரும் இதில் பங்கேற்றனர். ஒட்டுமொத்தமாக 8 ஆயிரம் பேர் வரை வந்து சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்தநிலையில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் நாட்டில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. கடந்த 24-ம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துவிட்டது.
கரோனா வைரஸைத் தடுக்க சமூக விலக்கல் தேவை என்பதால், மத்திய அரசு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து மக்கள் வீட்டுக்குள்ளே இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
அப்போதே அனைத்து தங்கும் விடுதிகள், உணவகங்கள், விருந்தினர் இல்லம், விடுதிகள் போன்றவற்றின் உரிமையாளர்கள் கூட்டம் கூடவிடாமல், சமூக விலக்கலைப் பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இந்தநிலையில் நிஜாமுதீன் மர்காஸ் கட்டிடத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்றாகக் கூடியிருந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை ஒரே இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏராளமான கரோனா நோயாளிகள் இங்கு இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மாநாட்டில் பங்கேற்றுச் சென்றவர்களில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் போது ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைக் கூட்டி மாநாடு நடத்திய நிஜாமுதீன் மர்காஸ் மவுலானா சாத் கந்தால்வி மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அந்த கட்டிடத்தில் தங்கியிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அங்கிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களையும் மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்துதல் மையங்களில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியதாவது:
‘‘இது மிகவும் பொறுப்பற்ற செயல். டெல்லியில் மொத்தமாக கரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட 97 பேரில் 24 பேர் தப்லிக் மாநாட்டில் பங்கேற்றவர்கள். உலகம் முழுவதுமே மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். மத வழிபாட்டு ஸ்தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இந்த சமயத்தில் இதுபோன்று மக்களை ஒரே இடத்தில் மக்களை கூட வைத்து தங்க வைத்தது தவறு. இது பெரிய விதிமுறை மீறல். இந்த தப்லிக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் இங்கிருந்து நாட்டின் பல மாநிலங்களுக்கு சென்றுள்ளனர். இதனால் எத்தனை மக்கள் பாதிக்கப்பட்டார்களோ, இதை நினைத்தாலே எனக்கு அச்சமாக உள்ளது. எனவே அனைத்து மதத் தலைவர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். மதத்தை போலவே உயிரும் மேலானது.’’ என கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT