Last Updated : 31 Mar, 2020 05:04 PM

 

Published : 31 Mar 2020 05:04 PM
Last Updated : 31 Mar 2020 05:04 PM

வைரஸை விட பயம் அதிக உயிர்களைக் கொல்லும்; புலம்பெயரும் தொழிலாளர்களைத் தடுத்து உணவு, உறைவிடம் கொடுங்கள்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

உச்ச நீதிமன்றம் : கோப்புப்படம்

புதுடெல்லி

கரோனா வைரஸ் பரவும் அச்சம், லாக்-டவுனால் தங்கள் சொந்த கிராமங்களுக்கு நெடுந்தொலைவு நடந்து செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைத் தடுத்து நிறுத்த வேண்டும், அவர்களுக்கு உணவு, தங்குமிடத்தை வழங்கிட வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

அதுமட்டுமல்லாமல் 24 மணிநேரத்துக்குள் ஒரு போர்டலை உருவாக்கி, அதில் கரோனா வைரஸ் குறித்த உண்மையான தகவல்களைத் தெரிவித்து வீண் வதந்தி பரவுவதைத் தடுக்க வேண்டும். வைரஸால் இறப்பதை விட பயத்தால் பலர் இறந்துவிடுவார்கள். ஆதலால், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில், அமைதிப்படுத்தும் வகையில் மதகுருமார்கள், ஆலோசனையாளர்கள் மூலம் நம்பிக்கை ஊட்ட வேண்டும் என்று உத்தரவிட்டது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த கிராமங்களுக்கு நடந்தே செல்கின்றனர். இவர்களுக்கு மத்திய அரசு உணவும், உறைவிடமும் வழங்கிட வேண்டும். இவர்களால் கரோனா வைரஸ் கிராமங்களுக்கு பரவிவிடக்கூடாது எனத் தெரிவித்து கேரள எம்.பி. ராஜ்மோகன் உன்னிதான், மேற்கு வங்க எம்.பி. என இருவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதி நாகேஸ்வரராவ் ஆகியோர் முன்னிலையில் காணொலி மூலம் விசாரிக்கப்பட்டது. மத்திய அரசுத் தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.

துஷார் மேத்தா வாதிடுகையில், “புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களின் சொந்த கிராமங்களுக்குச் சென்றால் கரோனா வைரஸ் பரவும் அச்சம் ஏற்படும். ஆதலால், இவர்கள் அந்தந்த மாநில எல்லைகளில் தடுக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் காரணமாகவே இந்த இடப்பெயர்வு ஏற்படுகிறது.

மக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கக் கூடாது, சமூக விலக்கல் தேவை என்பதால்தான் 21 நாட்கள் லாக்-டவுன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆதலால், தொழிலாளர்கள் நகர்வை அனுமதிக்கமாட்டோம்.

இது தொடர்பாக மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தப்பட்டு, புலம்பெயரும் தொழிலாளர்கள் தடுக்கப்பட்டுள்ளனர். இதுவரை 6.63 லட்சம் பேருக்கு உறைவிடம் வழங்கப்பட்டுள்ளது. 22.88 லட்சம் பேருக்கு உணவுவழங்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்களின் பயம் போக்கப்படும். அதற்காக கவுன்சிலிங் தரப்படும்” எனத் தெரிவித்தார்.

இதைக் கேட்ட தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே பிறப்பித்த உத்தரவில், “புலம்பெயரும் தொழிலாளர்கள் வேறு எங்கும் செல்லாத வகையில் தடுத்து நிறுத்திட வேண்டும். அவர்களுக்குத் தேவைான தங்குமிடம் , உணவு ஆகியவற்றை அரசு வழங்கிட வேண்டும். வைரஸ் கொல்வதைக் காட்டிலும் பயம் அதிகமானவர்களைக் கொன்றுவிடும். ஆதலால்,தொழிலாளர்கள் தங்குமிடங்களுக்கு மதகுருமார்கள், கவுன்சிலிங் செய்வோர் யாரை வேண்டுமானாலும் நியமித்து அவர்களை அமைதிப்படுத்துங்கள், புரியவையுங்கள்.

தொழிலாளர்கள் தங்கியிருக்கும் தங்குமிடத்தை போலீஸார் நடத்தாமல் தனியார் அமைப்புகள் நடத்த வேண்டும். தொழிலாளர்கள் மீது எந்த விதமான தடியடி, பலப் பிரயோகம் நடத்தக்கூடாது. அதேசமயம், இது தொடர்பாக வழக்குகள் மாநில உயர் நீதிமன்றங்களில் விசாரணைக்கு வந்தால் அதற்குத் தடை விதிக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் 24 மணிநேரத்துக்குள் ஒரு போர்டலை உருவாக்கி, அதில் கரோனா வைரஸ் குறித்த உண்மையான தகவல்களைத் தெரிவித்து வீண் வதந்தி பரவுவதைத் தடுக்க வேண்டும். வழக்கின் விசாரணையை ஏப்ரல் 7-்ம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம்'' எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x