Last Updated : 31 Mar, 2020 04:10 PM

 

Published : 31 Mar 2020 04:10 PM
Last Updated : 31 Mar 2020 04:10 PM

வீட்டில் சுய தனிமையா? ஒவ்வொரு மணிநேரமும் செல்ஃபி எடுத்து அனுப்பி வையுங்கள்: கர்நாடக அரசு உத்தரவு

பெங்களூரு

கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு வீட்டில் சுய தனிமையில் இருப்பவர்கள் ஒவ்வொரு மணிநேரத்துக்கும் ஒருமுறை செல்ஃபி எடுத்து அனுப்ப வேண்டும் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வீட்டில் சுய தனிமையில் இருப்பவர்கள் தடையை மீறி வெளியே சுற்றுவதாகத் தகவல் வந்ததையடுத்து இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மேலும், வீட்டில் தனிமைக்கு உள்ளானவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கவனிக்கவும் இந்த முறை பின்பற்றப்படுகிறது. இந்த விதிமுறையை மீறுவோர் ஒட்டுமொத்தமாக தனிமைப்படுத்தப்பட்டவர்கள் இருக்கும் இடத்துக்குக் கொண்டு செல்லப்படுவார்கள் எனவும் எச்சரித்துள்ளது.

இற்காக கர்நாடக அரசு பிரத்யேகமாக ஒரு செயலியை உருவாக்கி, அதில் சுய தனிமைக்கு ஆளானவர்களைப் பதிவு செய்யக்கோரியுள்ளது.

இதுகுறித்து கர்நாடக மருத்துவக் கல்வித்துறை அமைச்சர் கே.சுதாகர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

''கர்நாடக மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் வீட்டில் சுய தனிமையில் இருக்கிறார்கள். இவர்கள் கர்நாடக அரசு அரசு உருவாக்கியுள்ள பிரத்யேக செயலியில் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு ஒரு மணிநேரத்துக்கும் ஒருமுறை வீட்டில் சுய தனிமையில் இருப்பவர்கள் தங்களை செல்ஃபி எடுத்து அந்தச் செயலியில் பதிவேற்றம் செய்து, நேரத்தைக் குறிப்பிட வேண்டும். அந்தச் செயலியில் ஜிபிஎஸ் வசதி இருப்பதால், எந்த இடத்திலிருந்து செல்ஃபி எடுக்கிறோம் என்பது பதிவாகும்.

தூங்கும் நேரம் தவிர்த்து ஒவ்வொரு மணிநேரமும் செல்ஃபி எடுத்து அரசுக்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு செய்வதைத் தவிர்த்து அரசை ஏமாற்ற முயன்றால், அவர்களின் வீட்டுக்கு அரசு மருத்துவக் குழுக்கள் வருவார்கள். அவர்கள் அதன்பின் ஏராளமானோர் தனிமைப்படுத்தப்படுவதற்காக அரசு உருவாக்கியுள்ள இடத்துக்குக் கட்டாயம் மாற்றப்படுவார்கள்.

அதேபோல தவறான புகைப்படம், மார்ஃபிங் புகைப்படம் எடுத்து அனுப்பினாலும் இந்த தண்டனை கிடைக்கும். இந்தப் புகைப்படங்களை வைத்து அரசு மருத்துவர்கள் குழு அந்தந்த வீடுகளை அவ்வப்போது திடீரென ஆய்வு செய்வார்கள். அந்த ஆய்வு அறிக்கையும் அரசுக்கு அனுப்பப்டும்” .

இவ்வாறு அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x