Published : 31 Mar 2020 03:40 PM
Last Updated : 31 Mar 2020 03:40 PM

தோட்டத்தில் தனிமை வாழ்க்கை: சொந்த கிராமத்திற்கு கரோனா பரவாமல் தடுத்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்

கேரளாவில் இருந்து சொந்த மாநிலமான ஒடிசாவுக்கு திரும்பிய 12 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கிராமத்திற்குள் செல்லாமல் தோட்டத்தில் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று அச்சம் காரணமாக கடைகளுக்கு மருந்து உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக வந்த மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வருகின்றனர்.

கடைகளுக்கு முன்பு உரிய வகையி்ல் மக்கள் இடைவெளி விட்டு நிற்கும் வகையில் வட்டங்கள் வரையப்பட்டு இருந்தன. அந்த வட்டங்களில் வரிசைப்படி நின்று மக்கள் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டு ஸ்தலங்களும் மூடப்பட்டுள்ளன. எனினும் பல மாநிலங்களில் மக்கள், குறிப்பாக இளைஞர்கள் வீடுகளை விட்டு வெளியே சுற்றி திரியும் சம்பவங்கள் நடைபெறுகின்றன

தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் தலைநகர் டெல்லி உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் வெளிமாநிலங்களில் இருந்து வந்து பணியாற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர் ஊரடங்கு உத்தரவால் அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலையில் பலர் உள்ளூர் போக்குவரத்தை பயன்படுத்திக் கொள்வதுடன் நடந்த சென்றனர்.

இவ்வாறு சொந்த ஊர் வந்து சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் ஒடிசா மாநிலம் கலகாந்தியில் உள்ள பிப்லகுடா என்ற கிராமத்தைச் சேர்ந்த 12 பேரும் அடங்குவர். கேரள மாநிலத்தில் கூலி வேலைக்காக சென்ற அவர்கள் கரோனா வைரஸ் பரவியதால் பெரும் சிரமத்துடன் பல நாட்கள கழித்து ஊர் வந்து சேர்ந்தனர்.

சொந்த கிராமத்துக்கு வந்தாலும் அவர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்லவில்லை. கிராமத்தையொட்டியுள்ள வயல்வெளி தோட்டத்தில் தங்கியுள்ளனர். அங்கேய குடிசை அமைத்து, சமைத்து சாப்பிட்டு தூங்கி நேரத்தை செலவிட்டு வருகின்றனர். தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்ட அவர்கள் தங்களால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும், கிராம மக்களுக்கும் கரோனா வைரஸ் பரவிவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் இந்த முடிவை எடுத்தனர்.

அங்குள்ள மருத்துவமனைக்கு சென்றனர். அவர்களது ரத்த மாதிரியும் எடுக்கப்பட்டு கரோனோ சோதனைக்கு அனுப்பட்டது. அவர்களுக்கு கரோனா பாதிப்பு ஏதுமில்லை. எனினும் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நாட்கள் வரை முன்னெச்சரிக்கையாக வீடுகளுக்கு திரும்பாமல் தோட்டத்திலேயே தங்கி இருக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x