Published : 30 Mar 2020 05:47 PM
Last Updated : 30 Mar 2020 05:47 PM

தினமும் 40 ஆயிரம் பேருக்கு இலவச உணவு: ஏழைகளின் பசி தீர்க்கும் கேரள அரசு

ஊரடங்கு உத்தரவால் பசியுடன் முடங்கிக் கிடக்கும் தொழிலாளர்கள் பற்றிய செய்திகள் கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களிலிருந்தும் வெளிவருகின்றன. இந்நிலையில், “கேரளத்தில் 3 மாதங்களுக்குத் தேவையான உணவு தானியம் இருப்பு வைக்கப்படும்” என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். வீடுகளுக்கே உணவுகள் நேரடியாக வழங்கப்படுகின்றன. இதில் பெரும்பாலானோருக்கு இலவசமாகவே உணவு வழங்கப்படுவதுதான் குறிப்பிடத்தக்க விஷயம்.

இது குறித்து திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“கேரளத்தில் 3 மாதங்களுக்குத் தேவையான உணவு தானியம் இருப்பு வைக்கப்படும். ஆன்லைன் மூலம் வீட்டில் நேரடியாகப் பொருட்கள் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும். அரிசி, கோதுமை, பயறு வகைகள் , பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைச் சேகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இவற்றின் தரம் உறுதி செய்யப்பட்டு இருப்பு வைக்கப்படும்.

இந்தப் பொருட்கள் சாலை, ரயில் மற்றும் கடல் மார்க்கமாக வெளிமாநிலங்களிலிருந்து கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களும் கொள்முதல் செய்யப்படும். எந்த வகையிலும் உணவுப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என பொதுமக்கள் அஞ்ச வேண்டாம். உணவுப் பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாது.

ஏப்ரல் 1-ம் தேதி முதல் ரேஷன் கடைகள் மூலம் அரிசி விநியோகம் தொடங்கும். அனைவருக்கும் உணவுடன் பலசரக்குப் பொருட்களையும் அரசு வழங்கும். ஆனால், சில குடும்பத்தினருக்கு இது தேவைப்படாது. அப்படிப்பட்டவர்கள் விவரங்களைத் தெரிவித்தால் அரசுக்குப் பயனுள்ளதாக இருக்கும். கேரளாவில் இதுவரை 1,059 சமூக சமையலறைகள் தொடங்கப்பட்டுள்ளன. 52,480 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. 41,826 பேருக்கு இலவசமாக வழங்கப்பட்டது. 31,263 பேருக்கு வீட்டில் நேரடியாக உணவு கொடுக்கப்பட்டது. தேவையானவர்களுக்கு மட்டுமே உணவு வழங்க வேண்டும்.

ஈஸ்டர் மற்றும் சித்திரை விஷூ பண்டிகை நெருங்குவதால் உணவுப்பொருட்களை அதிகமாக இருப்பு வைக்க வேண்டும். இதற்கான தேவை அதிகரித்துள்ளது. பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் உணவு தானியம் வழங்கப்பட்டு வருகிறது. வழிபாட்டுத் தலங்களிலிருந்து கிடைக்கும் உணவை நம்பியிருப்பவர்களுக்கு உணவு கிடைக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

பொருட்கள் வாங்க பல இடங்களிலும் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. இதைத் தவிர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். விலை உயர்வைத் தடுக்க தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன”.

இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x