

இந்தியாவில் கரோனா தொற்று இன்னமும் சமூக பரவலாக மாறவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளது.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று அச்சம் காரணமாக கடைகளுக்கு மருந்து உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக வந்த மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வருகின்றனர்.
கடைகளுக்கு முன்பு உரிய வகையி்ல் மக்கள் இடைவெளி விட்டு நிற்கும் வகையில் வட்டங்கள் வரையப்பட்டு இருந்தன. அந்த வட்டங்களில் வரிசைப்படி நின்று மக்கள் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டு ஸ்தலங்களும் மூடப்பட்டுள்ளன. எனினும் பல மாநிலங்களில் மக்கள், குறிப்பாக இளைஞர்கள் வீடுகளை விட்டு வெளியே சுற்றி திரியும் சம்பவங்கள் நடைபெறுகின்றன
தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் தலைநகர் டெல்லி உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் வெளிமாநிலங்களில் இருந்து வந்து பணியாற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவால் அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
பல மாநிலங்களில் அவர்கள் உள்ளூர் போக்குவரத்தை பயன்படுத்திக் கொள்வதுடன் சிலர் நடந்த செல்கின்றனர். இவ்வாறு பலரும் தங்கள் சொந்த ஊர்களை சென்று சேர்ந்த வண்ணம் உள்ளனர்.
இதனால் கரோனா வைரஸ் மூன்றாவது நிலையான சமூக பரவலாக மாறி விடுமோ என்ற அச்சம் உள்ளது. ஆனால் இதனை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘‘இந்தியாவில் கரோனா தொற்று என்பது 2-ம் நிலையான ஒருவருக்கொருவர் என்ற அளவில் உள்ளது. இன்னமும் சமூக பரவலாக மாறவில்லை. அவ்வாறு மாறினால் கண்டிப்பாக அறிவிப்போம்.
ஆனால் அவ்வாறு இன்னமும் மாறவில்லை. எனவே சமூக பரவலாக மாறிவிடாமல் தடுக்கும் பொறுப்பு ஒவ்வொருவருக்கு உண்டு. இதற்காக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நடைமுறைகளை மக்கள் கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.