Published : 30 Mar 2020 03:42 PM
Last Updated : 30 Mar 2020 03:42 PM

கரோனா விழிப்புணர்வு: சமூக, மத அமைப்புகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை


கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக நாட்டின் முன்னணி சமூக மற்றும் மத அமைப்பினருடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கை தொடர்பாக மாநில முதல்வர்கள், அரசு அதிகாரிகள், மருத்துவ துறையினர் என பல தரப்பினருடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் வசதி மூலம் உரையாடி வருகிறார்.

காட்சி ஊடக பிரதிநிதிகள், பத்திரிகை ஆசிரியர்கள், ரேடியோ ஜாக்கிகளுடனும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து நாட்டின் முன்னணி சமூக மற்றும் மத அமைப்பினருடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.

போரா முஸ்லிம் சமூக அமைப்பு, ஆர்எஸ்எஸ், சாய்பாபா சமதி, பாபா ராம்தேவ் என பல தரப்பினரும் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய பணிகள் குறித்தும் பிரதமர் மோடி பேசினார்.

கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இதுகுறித்து மக்களுக்கு சரியான தகவல்களை தருவதும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

உலகம் முழுவதும் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள தருவாயில் சமூக மற்றும் மத ஆமைப்புகள் அமைப்புகள் முக்கிய பங்காற்ற வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். மேலும் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கும் பணியை சமூக அமைப்புகள் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x