Last Updated : 30 Mar, 2020 12:29 PM

 

Published : 30 Mar 2020 12:29 PM
Last Updated : 30 Mar 2020 12:29 PM

கரோனா யுத்தம்: இந்தியாவில் 1,071 பேருக்கு பாதிப்பு; 29 பேர் பலி

நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்து 71 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆகவும் அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவக் கொண்டு வந்தது. கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இருப்பினும் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் பலியாகவும், பாதிப்பாகவும் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து மத்திய சுகதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

''கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் 1,071 ஆக அதிகரித்துள்ளது, உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. இதில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 942 ஆகவும், குணமடைந்து சென்றவர்கள் எண்ணிக்கை 99 ஆகவும் இருக்கிறது.

காலை 10.30 மணி நிலவரப்படி மகாரஷ்டிரா மாநிலத்தில் 2 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக கரோனா வைரஸுக்கு 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் 5 பேர், கர்நாடக மாநிலத்தில் 3 பேர், மத்தியப் பிரதேசம், டெல்லி, ஜம்மு காஷ்மீர் ஆகியவற்றில் தலா 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.

கேரளா, தெலங்கானா, தமிழகம், பிஹார், மே.வங்கம், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் கரோனா வைரஸுக்கு உயிரிழந்துள்ளனர். ஓட்டுமொத்தமாக 1,071 பேர் பாதிக்கப்பட்டதில் 49 பேர் வெளிநாட்டினர்.

கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கையில் கேரளாவி்ல் 194 பேரும், அதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் 193 பேரும் உள்ளனர். கர்நாடகாவில் 80 பேர், உத்தரப் பிரதேசத்தில் 75 பேருக்கும் கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் 69 பேரும், குஜராத் மாநிலத்தில் 58 பேரும், ராஜஸ்தானில் 57 பேருக்கும் கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் 53 பேர், தமிழகத்தில் 50 பேருக்கு கரோனா வைரஸ் இருக்கிறது.

பஞ்சாப் மாநிலத்தில் 38 பேருக்கும், ஜம்மு காஷ்மீரில் 31 பேர், ஆந்திராவில் 19 பேர், மேற்கு வங்கத்தில் 19 பேர், லடாக்கில் 13 பேருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருக்கிறது.

பிஹார் மாநிலத்தில் 11 பேருக்கும், அந்தமான் நிகோபர் தீவுகளில் 9 பேருக்கும், சண்டிகரில் 8 பேருக்கும், சத்தீஸ்கர், உத்தரகாண்டில் 7 பேருக்கும் கரோனா இருக்கிறது. ஒடிசா, இமாச்சலப் பிரதேசம் மாநிலங்களில் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மிசோரம், மணிப்பூர், புதுச்சேரி மாநிலங்களில் தலா ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்''.

இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x