Published : 29 Mar 2020 09:59 PM
Last Updated : 29 Mar 2020 09:59 PM

‘‘3 மாதங்களுக்கு வாடகை கேட்காதீர்கள்’’ -வீட்டின் உரிமையாளர்களுக்கு கேஜ்ரிவால் அறிவுறுத்தல்

புதுடெல்லி

டெல்லியில் வாடகைக்கு இருப்போரிடம் அடுத்த 3 மாதங்களுக்கு வீட்டின் உரிமையாளர்கள் வாடகை கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம், அவர்கள் தராவிட்டால் அதனை மாநில அரசு தரும் என முதல்வர் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் தலைநகர் டெல்லி உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் வெளிமாநிலங்களில் இருந்து வந்து பணியாற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவால் அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

பல மாநிலங்களில் அவர்கள் உள்ளூர் போக்குவரத்தை பயன்படுத்திக் கொள்வதுடன் சிலர் நடந்த செல்கின்றனர். இவ்வாறு பலரும் தங்கள் சொந்த ஊர்களை சென்று சேர்ந்த வண்ணம் உள்ளனர்.

தொழிலாளர்கள் பலர் வேலையிழந்துள்ளதால் அவர்கள் வீட்டு வாடகை தர முடியாத சூழல் நிலவுவதால் அவர்களை வீட்டை காலி செய்யச் சொல்லி உரிமையாளர்கள நிர்பந்தம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியதாவது:
‘‘டெல்லியில் வாடகைக்கு இருப்போரிடம் அடுத்த 3 மாதங்களுக்கு வீட்டின் உரிமையாளர்கள் வாடகை கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம். சில மாதங்களுக்கு பிறகு நிலைமை சீரடைந்தால் அவர்களே தருவார்கள். அப்படி அவர்கள் தராவிட்டால் அதனை மாநில அரசு தரும்.இதற்காக யாரையும் வீடுகளை விட்டு வெளியேற்றாதீர்கள்’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x