Published : 29 Mar 2020 06:56 PM
Last Updated : 29 Mar 2020 06:56 PM

‘‘ஊரடங்கை மீறி வெளியே வந்துள்ளேன்; என் அருகில் வராதீர்கள்’’- அத்துமீறிய இளைஞர் நெற்றியில் மையால் எழுதிய பெண் காவலர்

மத்திய பிரதேசத்தில் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அத்துமீறி வெளியே சுற்றிய இளைஞரின் நெற்றியில் ‘ஊரடங்கை மீறி வெளியே வந்துள்ளேன்; என் அருகில் வராதீர்கள்’ என எளிதில் அழியாத மையால் பெண் காவல் உதவி ஆய்வாளர் எழுதிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று அச்சம் காரணமாக கடைகளுக்கு மருந்து உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக வந்த மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வருகின்றனர்.

கடைகளுக்கு முன்பு உரிய வகையி்ல் மக்கள் இடைவெளி விட்டு நிற்கும் வகையில் வட்டங்கள் வரையப்பட்டு இருந்தன. அந்த வட்டங்களில் வரிசைப்படி நின்று மக்கள் பொருட்களை வாங்கிச் சென்றனர்.

கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டு ஸ்தலங்களும் மூடப்பட்டுள்ளன. எனினும் பல மாநிலங்களில் மக்கள், குறிப்பாக இளைஞர்கள் வீடுகளை விட்டு வெளியே சுற்றி திரியும் சம்பவங்கள் நடைபெறுகின்றன.

இந்தநிலையில் மத்திய பிரதேசத்தில் சத்திரபூரில் இதேபோன்று இளைஞர்கள் வெளியே சுற்றி திரியும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது.

இதையடுத்து கோரிஹார் என்ற இடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் அமிர்தா அங்கு அத்துமீறி வெளியே சுற்றிய இளைஞர் ஒருவரை தடுத்து நிறுத்தினார்.

அந்த இளைஞரின் நெற்றியில் ‘ஊரடங்கை மீறி வெளியே வந்துள்ளேன்; என் அருகில் வராதீர்கள்’ என எளிதில் அழியாத மையால் எழுதியுள்ளார். ஆனால் இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x