ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
Updated on
1 min read

ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த வேண்டும் எனவும், அதனை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று அச்சம் காரணமாக கடைகளுக்கு மருந்து உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக வந்த மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வருகின்றனர்.

கடைகளுக்கு முன்பு உரிய வகையி்ல் மக்கள் இடைவெளி விட்டு நிற்கும் வகையில் வட்டங்கள் வரையப்பட்டு இருந்தன. அந்த வட்டங்களில் வரிசைப்படி நின்று மக்கள் பொருட்களை வாங்கிச் சென்றனர்.

கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டு ஸ்தலங்களும் மூடப்பட்டுள்ளன. எனினும் பல மாநிலங்களில் மக்கள், குறிப்பாக இளைஞர்கள் வீடுகளை விட்டு வெளியே சுற்றி திரியும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. அதுமட்டுமின்றி மக்கள் பொருட்களை வாங்குவதற்காக பெரிய அளவில் சந்தைகளில் கூடும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் தலைநகர் டெல்லி உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் வெளிமாநிலங்களில் இருந்து வந்து பணியாற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவால் அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

பல மாநிலங்களில் அவர்கள் உள்ளூர் போக்குவரத்தை பயன்படுத்திக் கொள்வதுடன் சிலர் நடந்த செல்கின்றனர். இவ்வாறு பலரும் தங்கள் சொந்த ஊர்களை சென்று சேர்ந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் கிராமங்கள் மற்றும் சிறுநகரங்களுக்கு திரும்பி வரும்வேளையில் அங்கும் கரோனா வைரஸ் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த வேண்டும் எனவும், அதனை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வெளியே வரவிடாமல் தடுத்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிளையும் வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in