Last Updated : 28 Mar, 2020 05:49 PM

 

Published : 28 Mar 2020 05:49 PM
Last Updated : 28 Mar 2020 05:49 PM

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் செவிலியர்; தொலைபேசியில் அழைத்துப் பாராட்டிய பிரதமர் மோடி: வைரலாகும் ஆடியோ

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் செலிவியரை தொலைபேசியில் அழைத்துப் பேசிய பிரதமர் மோடி, அவரின் பணிக்கும், மருத்துவமனை ஊழியர்கள் பணிக்கும் பாராட்டு தெரிவித்தார்.

புனேவில் உள்ள நாயுடு நகராட்சி மருத்துவனையில் செவிலியராகப் பணிபுரிந்து வருபவர் சகாயா ஜெகதீப். இந்த செவிலியர் கரோனா நோயாளிகள் இருக்கும் வார்டில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை பிரதமர் அலுவலகத்தில் இருந்து மருத்துவமனைக்கு அழைப்பு வந்தது. செவிலியர் நந்து ஜெகதீப்புடன் பிரதமர் மோடி பேச விரும்புகிறார் எனத் தகவல்தெரிவிக்கப்பட்டது.

செவிலியர் ஜெகதீப்புடன், பிரதமர் மோடி பேசிய உரையாடல் பதிவு செய்யப்பட்டது. மராத்தியில் பேசிய பிரதமர் மோடி, செவிலியர் ஜெகதீப்பின் சேவைக்குப் பாராட்டுகள் தெரிவித்தார், மேலும் கரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்வதால் குடும்பத்தினர் தங்களின் பாதுகாப்பு குறித்து கவலைப்படுகிறார்களா எனக் கேட்டார்.

அதற்கு செவிலியர் ஜெகதீப் பேசுகையில், “ஆம் கவலைப்படுகிறார்கள், நானும் கவலைப்படுகிறேன். வேலைக்கு வந்துவி்ட்டால், சூழலுக்கு ஏற்றவாறு நோயாளிகளுக்கு சேவை செய்ய வேண்டும். நான் சமாளித்துக்கொண்டேன்” என பதில் அளித்தார்.

அதன்பின் பிரதமர் மோடி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கரோனா நோயாளிகள் அச்சப்படுகிறார்களா என செவிலியர் ஜெகதீப்பிடம் கேட்டார்.

அதற்கு அவர், “நாங்கள் நோயாளிகளுடன் பேச முயல்கிறோம். அவர்களுக்கு ஆறுதல் தெரிவி்த்து, அச்சப்படும் வகையில் ஒன்றுமில்லை என்று உறுதியளிக்கிறோம். ஒன்றும் நடந்துவிடாது. ரத்த மாதிரி சோதனை நெகட்டிவாக வரும் என்று ஆறுதல் தெரிவிக்கிறோம்” என்று செவிலியர் ஜெகதீப் தெரிவித்தார்.

மேலும் இந்த மருத்துவமனையிலிருந்து கரோனா நோயினால் பாதிக்கப்பட்ட 7 நோயாளிகள் குணமடைந்து சென்றனர் என்ற தகவலையும் பிரதமர் மோடியிடம் செவிலியர் தெரிவித்தார்.

லட்சக்கணக்கான மருத்துவப் பணியாளர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன என்று பிரதமர் மோடி கேட்டார். அதற்கு ஜெகதீப், “அச்சப்படத் தேவையில்லை. இந்த நோயை நாம் நாட்டை விட்டு துரத்துவோம். நாம் நாட்டை வெற்றி பெற வைப்போம். இதுதான் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் குறிக்கோள்” எனத் தெரிவித்தார்.

அதற்கு பிரதமர் மோடி, “ஜெகதீப்பின் சேவைக்கும், பணி அர்ப்பணிப்புக்கும் பாராட்டு தெரிவித்தார். உங்களைப் போன்ற லட்சக்கணக்கான செவிலியர்கள் இந்த நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு இந்த நேரத்தில் வாழ்த்து தெரிவிக்கிறேன். உங்களின் அனுபவத்தைக் கேட்டது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

அதற்கு செவிலியர் ஜெகதீப், “நான் எனது கடமையை மட்டும்தான் செய்தேன். ஆனால், நீங்கள் 24 மணிநேரமும் நாட்டுக்காக உழைத்து வருகிறீர்கள். நாங்கள்தான் உங்களை நினைத்துப் பெருமைப்பட வேண்டும். இதுபோன்ற பிரதமரைப் பெற இந்த நாடு அதிர்ஷ்டம் செய்துள்ளது” எனத் தெரிவித்தார்.

பிரதமர் மோடியும், செவிலியர் ஜெகதீப்பும் பேசிய ஒலி உரையாடல் வைரலாகி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x