Last Updated : 28 Mar, 2020 04:00 PM

 

Published : 28 Mar 2020 04:00 PM
Last Updated : 28 Mar 2020 04:00 PM

நடந்தே ஊர் செல்லும் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களுக்கு என்ன உதவி செய்தோம்?-பிரியங்கா கேள்வி

லாக் டவுனில் சிக்கித் தவித்த ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு நடந்தே செல்கின்றனர். ஒரு தேசமாக அவர்களுக்கு என்ன உதவி செய்தோம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவிலும் ஊடுருவியுள்ள கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பிரதமர் மோடி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று 21 நாள் லாக் டவுனை அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நகரங்களில் பணியாற்றி வந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்றனர். போக்குவரத்து ரத்து செய்யப்பட்ட நிலையில் ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்லமுடியாமல் தவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் உ.பி., பிஹார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பலர் தங்கள் சொந்த கிராமங்களுக்கு நடந்தே செல்கின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன.

டெல்லியிலிருந்து உ.பி.நோக்கி செல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள்

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் தளத்தில் அடுத்தடுத்த பதிவுகளில் கூறியதாவது:

''கிழக்கு உ.பி. மற்றும் பிஹார் வரை நடந்தே செல்பவர்களில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளும் உள்ளனர். ஒரு தேசமாக நாம் எப்படி ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அப்படியே விட முடியும்?

ஐரோப்பாவில் சிக்கிய நமது குடிமக்களை அழைத்து வர விமானங்களை அனுப்பினோம். இங்கு நம்மிடையே ஏழைகளையும் பாதிப்புக்கு உள்ளானவர்களையும் பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்க என்ன போக்குவரத்து ஏற்பாடு செய்தோம்?

நெருக்கடியான இந்த நேரத்தில் நமது சக குடிமக்களுக்கு உதவுவது அரசாங்கங்களின் தார்மீக கடமையாகும். மோடி ஜி, அமித் ஷா ஜி தயவுசெய்து உங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை அவர்களின் உயிரைக் காப்பாற்றப் பயன்படுத்தவும்''.

இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x