Last Updated : 27 Mar, 2020 05:34 PM

 

Published : 27 Mar 2020 05:34 PM
Last Updated : 27 Mar 2020 05:34 PM

கரோனாவால் கவலை வேண்டாம்: முதியோர், மாற்றுத்திறனாளிகள், கணவனை இழந்தவர்கள் உள்பட 3 கோடி பேருக்கு மொத்தமாக 3 மாத ஓய்வூதியம்: விரைவில் வழங்க மத்திய அரசு முடிவு

பிரதிநிதித்துவப் படம்.

புதுடெல்லி

கரோனா வைரஸைத் தடுக்கும் வகையில் 21 நாட்கள் ஊரடங்கை மத்திய அரசு செயல்படுத்தி வரும் நிலையில், அதனால் ஏற்படும் பொருளாதாரப் பிரச்சினையை சமாளிக்கும் பொருட்டு முதியோர், மாற்றுத்திறனாளிகள், கணவனை இழந்த பெண்கள் ஆகியோருக்கு 3 மாத ஓய்வூதியத்தை மொத்தமாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஓய்வூதியம் ஏப்ரல் முதல் வாரத்தில் அவர்களின் வங்கிக் கணக்கில் கிடைக்கப்பெறும். இதன் மூலம் 3 கோடி பேர் பயன்பெறுவார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் பரவி வரும் கரோனா வைரஸுக்கு இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். 740க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் 21 நாட்கள் ஊரடங்கிற்கு மத்திய அரசு உத்தரவிட்டது.

21 நாட்கள் ஊரடங்கினால் ஏரளமான தொழில்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள், சிறு, குறுந்தொழில்கள் மூடப்பட்டுள்ளன. 21 நாட்களுக்குப் பின் பொருளாதாரத்தில் பெரும் சுணக்கம் வருவதை அறிந்த மத்திய அரசு ஏற்கெனவே ரூ.1.70 லட்சம் கோடிக்கான நிதித் தொகுப்பை நேற்று வெளியிட்டது. ரிசர்வ் வங்கியும் வட்டிக் குறைப்பு, வங்கிகளில் கடன் தவணை செலுத்துவதில் 3 மாதம் விலக்கு உள்ளிட்டவற்றை அறிவித்தது.

இந்த சூழலில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், கணவனை இழந்த பெண்கள் ஆகியோருக்கு முன்கூட்டியே 3 மாத ஓய்வூதியத்தை மத்திய அரசு ஏப்ரல் மாத முதல் வாரத்தில் வழங்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தேசிய சமூக உதவித்திட்டம் மூலம் ஏழை முதியோர், கணவனை இழந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் இந்தத் திட்டத்தில் 2.98 கோடி பயனாளிகள் உள்ளனர். இவர்களுக்கு ஏப்ரல் மாத முதல் வாரத்தில் அவர்களின் வங்கிக் கணக்கில் அரசே முன்கூட்டியே 3 மாத ஓய்வூதியதைச் செலுத்தும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன்படி முதியோருக்கு அதாவது 60 வயது முதல் 70 வயதுள்ளோருக்கு மாதம் ரூ.200, 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு ரூ.500 மாதந்தோறும் வழங்கப்படுகிறது.

40 வயது முதல் 79 வயதுடைய கணவனை இழந்த பெண்களுக்கு மாதம் ரூ.200 ,80 வயதுக்கு மேல் உள்ளோருக்கு ரூ.500 வழங்கப்படுகிறது. 79 வயது வரை இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.300, 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு ரூ.500 வழங்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x