Published : 26 Mar 2020 01:49 PM
Last Updated : 26 Mar 2020 01:49 PM

‘‘கரோனா தொற்று ஏற்படும்; ஜாமீன் கொடுங்கள்’’- சிறையில் உள்ள கிறிஸ்டியன் மைக்கேல் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு

கரோனா தொற்று ஏற்படும் ஆபத்து இருப்பதால் தனக்கு இடைக்கால ஜாமீன் கொடுக்க வேண்டும் என ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2-வது முறையாக ஆட்சியில் இருந்தபோது குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பயணிப்பதற்காக இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ரூ.3,600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக அந்த நிறுவனம் ரூ.450 கோடி லஞ்சம் வழங்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக இத்தாலி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அந்த நிறுவனத்தின் 2 உயர் அதிகாரிகள் குற்றவாளிகள் என நிரூபணமானது.

இதையடுத்து, இந்தியாவிலும் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த விமானப்படை முன்னாள் தலைமை தளபதி எஸ்.பி.தியாகி, அவரது உறவினர் சஞ்சீவ் மற்றும் ஒரு வழக்கறிஞர் ஆகியோரை சிபிஐ கைது செய்தது. அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் ரத்து செய்யப்பட்டது.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் இந்திய தலைவர் பீட்டர் ஹுலெட்டுக்கு இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல், சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அதேபோல ஹெலிகாப்டர் பேர ஊழலில் ரூ.90 கோடி மோசடி செய்ததாக ராஜீவ் ஷாம்செர் பகதூர் சக்சேனா கடந்த மாதம் 31-ம் தேதி துபாயில் கைது செய்யப்பட்டு இந்தியா அழைத்துவரப்பட்டார். மூன்று நாட்கள் விசாரணைக்குப் பிறகு அதிகாரிகள் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவரைக் காவலில் வைக்க உத்தரவிட்டது.

டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிறிஸ்டியன் மைக்கேல் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் ‘‘உலகம் முழுவதும் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது இந்தியாவிலும் இதன் பாதிப்பு உள்ளது. கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கையாக கைதிகளை பரேல் அல்லது முன் ஜாமீனில் விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

எனக்கும் வயதாகி விட்டது. கரோனா தொற்றினால் பாதிப்பு ஏற்படும். எனவே திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும்.’’ எனக் கோரியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x