Published : 25 Mar 2020 06:32 AM
Last Updated : 25 Mar 2020 06:32 AM

கரோனா வைரஸ் பாதிப்பு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: பத்திரிகை ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கரோனா வைரஸ் பரவலில் இந்தியா தற்போது 2-ம் கட்டத்தில் இருப்பதால், அதற்குள் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது.

பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவித்த மத்திய அரசு, திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள் போன்றவற்றை வரும் 31-ம் தேதிவரை திறக்கத் தடை விதித்துள்ளது. மேலும் பயணிகள் ரயில்கள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் வேண்டு கோள்படி மக்கள் தாமாக முன்வந்து மக்கள் ஊரடங்கை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தினர். இதன் தொடர்ச்சியாக நாடுமுழுவதும் 80-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கரோனா தொற்று அதிகம் பரவும் பகுதியாக கண்டறியப்பட்டு மற்ற பகுதிகளில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கை தொடர்பாக மாநில முதல்வர்கள், அரசு அதிகாரிகள், மருத்துவ துறையினர் என பல தரப்பினருடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் வசதி மூலம் உரையாடி வருகிறார்.

நேற்று முன்தினம் காட்சி ஊடக பிரதிநிதிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடந்து நாட்டின் முன்னணி நாளிதழ்கள் உட்பட பத்திரிகை ஆசிரியர்கள், நிறுவனங் களின் தலைவர்களுடன் நேற்று அவர் ஆலோசனை நடத்தினார்.

அப்போது கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய பணிகள் குறித்தும் பிரதமர் மோடி பேசினார். கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இதுகுறித்து மக்களுக்கு சரியான தகவல்களை தருவதும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அவசியம் என்று அப்போது பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x