Published : 24 Mar 2020 10:43 PM
Last Updated : 24 Mar 2020 10:43 PM

கரோனா வைரஸ் தொற்று; இந்தியாவில் பாதிப்பு: எண்ணிக்கை 536 ஆக உயர்வு

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 536 ஆக அதிகரித்துள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தொடக்கத்திலேயே தடுக்க வேண்டும் என்ற முனைப்பில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமான நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இருப்பினும் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடரந்து உயர்ந்து வருகிறது.

இதனால், தீவிரத்தை உணர்ந்ததால் 32 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, வரும் 31-ம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கை அமல்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். இதைச் செயல்படுத்தியபின்புதான் மாநில அரசுகள் தற்போது ஊரடங்கை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் செயல்படுத்தி வருகின்றனர். கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது இன்று நள்ளிரவு முதல் நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாகவும், மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்தியாவில் தொடர்ந்து கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 536 ஆக அதிகரித்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x