Published : 24 Mar 2020 08:12 PM
Last Updated : 24 Mar 2020 08:12 PM

நாடு முழுவதும் இன்று நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு: பிரதமர் மோடி அறிவிப்பு

கரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழலில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு மீண்டும் உரையாற்றினார். மக்கள் ஒவ்வொருவரும் சூழலை உணர்ந்து பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

உலக அளவில் நாடுகளை உலுக்கி எடுத்து வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. கரோனா வைரஸ் பரவுவதைத் தொடக்கத்திலேயே தடுக்க வேண்டும் என்ற முனைப்பில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமான நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இருப்பினும் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 500 பேரை தாண்டி விட்டது.

இதனால், தீவிரத்தை உணர்ந்ததால் 32 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, வரும் 31-ம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கை அமல்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். இதைச் செயல்படுத்தியபின்புதான் மாநில அரசுகள் தற்போது ஊரடங்கை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் செயல்படுத்தி வருகின்றனர். கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதாக தெரிவித்து இருந்தார். அதன்படி அவர் நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றினார்.

அவர் தனது உரையில் கூறியதாவது:

மக்கள் ஊரடங்கின் மூலம் இந்திய மக்கள் கரோனா வைரஸை் எதிர்த்து போராடுகிறார்கள் என்பதை உலகம் அறிந்து கொண்டது. எந்த தடை வந்தாலும் மனித குலத்திற்காக ஒருங்கிணைந்து செயல்பட்டோம்.மக்கள் ஒவ்வொருவரும் சூழலை உணர்ந்து பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

ஒருவர் மூலமாக மற்றொருவருக்கு எளதில் வைரஸ் பரவும். இதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மக்கள்உயிருக்கு ஆபத்து ஏற்படுவதை ஒருபோதும் சகிக்க முடியாது. மக்கள் தங்கள் சூழலை உணர்ந்து ஒத்துழைக்க வேண்டும்.

நாடுமுழுவதும் இன்று நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படும். இதன் மூலம் முழு அளவில் கரோனாவுக்கு எதிராக நாம் போராட முடியும். அடுத்த 21 நாட்களுக்கு இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். ஒவ்வொரு இந்தியரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்த 21 நாட்களை மக்கள் ஆக்கபூர்வமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x