Last Updated : 24 Mar, 2020 02:30 PM

 

Published : 24 Mar 2020 02:30 PM
Last Updated : 24 Mar 2020 02:30 PM

மகாராஷ்டிராவில் கரோனா: மும்பையில் 3-வது பலி்; மருத்துவக் கண்காணிப்பில் இருந்து தப்பிய பெண் - 25 லட்சம் மாஸ்க் பறிமுதல்

மகாராஷ்டிராவில் கரோனா வைரஸ் நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த 65 வயது முதியவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதையடுத்து மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும நோக்கில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமாக தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். 32 மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வரும் 31-ம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு இதுவரை இந்தியாவில் 10 பேர் பலியாகியுள்ளானர். தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 500 பேரை எட்டியுள்ளது. இதில் மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று புதிதாக 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது. கரோனா நோயால் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 12 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மும்பையில் ஏற்கெனவே கரோனா வைரஸுக்கு இருவர் உயிரிழந்தநிலையில் 3-வது உயிர் பலி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மும்பை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் “அகமதாபாத்தைச் சேர்ந்த 65 வயது முதியவர் சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து மும்பை திரும்பினார். அவருக்கு ஏற்கெனவே உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் இருந்து வந்தது. உடல் நிலை சரியில்லாத நிலையில் மும்பை கஸ்தூரிபா மருத்துவமனையில் 20-ம் தேதி அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்தார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட முகக் கவசங்கள்.

25 லட்சம் முகக் கவசங்கள் பறிமுதல்

இதற்கிடையே மும்பை போலீஸார் 25 லட்சம் முகக் கவசங்களை எடுத்துச் சென்ற 3 லாரிகளைப் பிடித்துள்ளனர். இதுகுறித்து மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் நிருபர்களிடம் கூறுகையில், “3 லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட 2.5 லட்சம் முகக் கவசங்கள், என்-49 முகக்கவசம், அறுவை சிகிச்சை முக்ககவசம் ஆகியவற்றை மும்பை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதைப் பதுக்கிய சிலர் கடத்த முயன்றபோது பறிமுதல் செய்யப்பட்டது, இதன் மதிப்பு ரூ.15 கோடியாகும். முகக் கவசத்துக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

கண்காணிப்பில் தப்பிய பெண் சிக்கினார்

கரோனா நோய் அறிகுறிகளுடன் வீட்டில் மருத்துவக் கண்காணி்ப்பில் இருந்த பெண் தப்பிச் செல்ல முயன்றபோது போலீஸிடம் சிக்கியுள்ளார். நாக்பூைரச் சேர்ந்த 35 வயதுப் பெண் ஷார்ஜாவில் இருந்து சமீபத்தில் திரும்பியுள்ளார். அவர் கரோனா நோய் அறிகுறிகளுடன் இருந்ததால், அவரை வீ்ட்டுக் கண்காணிப்பில் வைத்து கையில் சீல் வைத்து அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள தனது பெற்றோரைப் பார்க்கப் போகிறேன் எனக் கூறிவிட்டு நாக்பூர் விமான நிலையத்துக்குச் சென்றார். அங்கு அந்தப் பெண்ணை சோதனையிட்ட போது கைகளில் கண்காணிப்பு முத்திரை இருந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். இதையடுத்து, அந்தப் பெண்ணைத் தடுத்து நிறுத்தினர்.

முன்னதாக நேற்று இரவு அந்தப் பெண்ணின் வீட்டுக்கு சிகிச்சைக்காகச் சென்ற மருத்துவமனை மருத்துவர்கள் வீடு பூட்டியிருந்ததைப் பார்த்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்தப் பெண்ணின் பெற்றோர் உத்தரப் பிரதேசம் ஜோகன்பூரில் இருந்ததால் அவர்களையும் தொடர்பு கொண்டார்கள். ஆனால், அந்தப் பெண் அங்கு வரவில்லை எனத்தெரியவந்தது.

இதையடுத்து, விமான நிலையத்தில் சோதனையை தீவிரப்படுத்தியபோதுதான் அந்தப் பெண் போலீஸிடம் சிக்கினார். அவர் மீது போலீஸா் வழக்குப்பதிவு செய்து, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x