Published : 23 Mar 2020 10:22 PM
Last Updated : 23 Mar 2020 10:22 PM

கரோனா ரைவஸுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு: இந்தியாவில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

கரோனா ரைவஸுக்கு மேலும் ஒருவர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கரோனா வைரஸ் பரவலில் இந்தியா தற்போதும் 2-ம் கட்டத்தில் இருப்பதால், அதற்குள் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது.

பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவித்த மத்திய அரசு, திரையரங்குகள், மக்கள் கூடுமிடங்கள், ஷாப்பிங் மால்கள் போன்றவற்றை வரும் 31-ம் தேதிவரை திறக்கத் தடை விதித்தது. ரயில்கள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவுவது அதிகரித்து வருவதால் உள்நாட்டு விமானப் போக்குவரத்தையும் நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பிரதமர் மோடியின் வேண்டுகோள்படி மக்கள் தாமாக முன்வந்து நேற்று சுய ஊரடங்கை நடைமுறைப்படுத்தினர். இதன் தொடர்ச்சியாக நாடுமுழுவதும் 80-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கரோனா தொற்று அதிகம் பரவும் பகுதியாக கண்டறியப்பட்டு மற்ற பகுதிகளில் இருந்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையி்ல மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

இந்தநிலையில் மேற்குவங்க மாநிலம் டம்டம்மில் கரோனா வைரஸ் பாதித்த தனியார் மருத்துமவமனையில் 57 வயது நபர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்தார். இதையடுத்து இந்தியாவில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.

இந்தநிலையில் மேலும் ஒருவர் இன்று இரவு உயிரிழந்தார். இதனால் இந்தியாவில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இதுபோலவே கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளோர் எண்ணிக்கை இந்தியாவில் 467 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்,

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x