

பாலிவுட் பாடகி கனிகா கபூர் கடந்த மார்ச் 9-ம் தேதி லண்டனில் இருந்து மும்பை திரும்பினார். பின்னர் அவர் லக்னோ சென்று அங்கு நடந்த இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.
அந்த நிகழ்ச்சியில் அரசியல் பிரபலங்கள், சினிமா நடிகர், நடிகைகள் என 100 பேர் கலந்து கொண்டுள்ளனர். கனிகா தான் லண்டனில் இருந்து வந்ததையும், தனக்கு கரோனா தொற்று சோதனை நடந்ததா என்பதையும் யாரிடமும் கூறவில்லை எனக் கூறப்படுகிறது.
லக்னோவில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் வசுந்தரா ராஜேவும் அவரது மகனும் பாஜக எம்.பி.யுமான துஷ்யந்தும் கலந்து கொண்டனர். பின்னர் கனிகா கபூருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ள நிலையில் வசுந்தரா ராஜேவும் அவரது மகன் துஷ்யந்தும் தங்களை தாங்களே தானே தனிமைப்படுத்திக் கொண்டனர்.
தான் வெளிநாடு சென்று வந்த கனிகா கபூரை இணையத்தில் பலரும் திட்டித் தீர்த்தனர். அவரை கைது செய்யவேண்டும் என்று பல தரப்பிலிருந்து குரல்கள் வலுத்த நிலையில் போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். லக்னோ மருத்துவமனையில் கனிகா கபூர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் கனிகா கபூர் வெளிநாடு சென்று திரும்பியதும் அவருடன் தொடர்பில் இருந்த 260 பேரையும் போலீஸார் கண்டுபிடித்தனர். ஆனால் அவர்களில் ஓஜாஸ் தேசாய் என்ற ஒருவரை மட்டும் போலீஸாரால் தொடர்பு கொள்ள இயலவில்லை. அவருடைய முகவரியும் சரியாக தெரியவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். கனிகா கபூர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதால் தற்போது அவரிடமும் விசாரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கனிகாவின் நெருங்கிய நண்பராக அறியப்படும் ஓஜாஸ் தேசாய் 70 வயதை கடந்த தனது பெற்றோருடன் வசித்து வருவதாகவும், இதனால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்றும் போலீஸார் கவலை தெரிவித்தனர்.