நக்சல்களுடன் துப்பாக்கிச் சண்டை: 17 பாதுகாப்புப் படையினர் சத்தீஸ்கரில் உயிரிழப்பு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள மின்பா வனப்பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் பிற்பகல் 1 மணியளவில் மாவட்ட அதிரடிப் படை, சிறப்பு விரைவுப் படை, கோப்ரா படையைச் சேர்ந்த வீரர்கள் சுமார் 150 பேர் அங்கு சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு மறைந்திருந்த 300-க்கும் மேற்பட்ட நக்சல்கள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.

சுமார் 4 மணிநேரம் நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படை வீரர்கள் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 14 வீரர்கள் பலத்த காயமடைந்தனர். அவர்கள் சுக்மாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, கடந்த 2017-ம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள புர்காபால் பகுதியில் நக்சல்கள் நிகழ்த்திய தாக்குதலில் 25 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in