Published : 22 Mar 2020 04:21 PM
Last Updated : 22 Mar 2020 04:21 PM

டெல்லி திரும்ப வேண்டாம்; தேசியவாத காங்கிரஸ் எம்.பி.களுக்கு சரத்பவார் அறிவுறுத்தல்

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் தேசியவாத காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று சரத் பவாரும் அறிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கரோனா வைரஸ் பரவலில் இந்தியா தற்போதும் 2-ம் கட்டத்தில் இருப்பதால், அதற்குள் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது.

பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவித்த மத்திய அரசு, திரையரங்குகள், மக்கள் கூடுமிடங்கள், ஷாப்பிங் மால்கள் போன்றவற்றை வரும் 31-ம் தேதிவரை திறக்கத் தடை விதித்தது. ரயில்கள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று மக்கள் தாமாக முன்வந்து சுய ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டபடி மக்கள் ஊரடங்கு நடந்து வருகிறது.

இதபோல் நாடாளுமன்றக் கூட்டத்தொடரையும் ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் இதுபற்றி அரசு அறிவிப்பு ஏதும் செய்யவில்லை.

இந்தநிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் நாளை முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரை நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என அக்கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரும் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளில் கவனம் செலுத்தும் வகையில் தேசியவாத கட்சியின் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் அனைவரும் டெல்லி திரும்ப வேண்டாம்.

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்க வேண்டாம். அதற்கு பதிலாக தங்கள் சொந்த தொகுதியிலேயே தங்கி இருக்க வேண்டும். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கரோானா ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாநில அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x