

கரோனா தடுப்பு நடவடிக்கையாக பிஹார் மாநிலத்துக்கு எந்த விமானங்களையும் இயக்க வேண்டாம் என முதல்வர் நிதிஷ் குமார் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தை கேட்டுக் கொண்டுள்ளார்.
சீனாவில் உருவாகி உலகை ஆட்டிப் படைத்து வரும் கரோனா வைரஸுக்கு உலக நாடுகள் அஞ்சி வருகின்றன. உலக அளவில் இதுவரை கரோனா வைரஸுக்கு 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளார்கள். 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலும் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும். தடுப்பு நடவடிக்கைகளும் எடுத்தாலும் கரோனா பரவலைத் தடுக்க முடியவில்லை. தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.
மேலும் இன்று மக்கள் தாமாக முன்வந்து சுய ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டபடி மக்கள் ஊரடங்கு நடந்து வருகிறது.
இந்தநிலையில் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது கரோனா தடுப்பு நடவடிக்கையாக பிஹார் மாநிலத்துக்கு எந்த விமானங்களையும் இயக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.
பிஹார் மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இந்த நடவடிக்கை மிகவும் அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.