Published : 22 Mar 2020 09:52 AM
Last Updated : 22 Mar 2020 09:52 AM

200 மி.லி. கிருமி நாசினியின் விலை ரூ.100- உச்ச வரம்பு நிர்ணயித்தது மத்திய அரசு

விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக, 200 மி.லி. கிருமி நாசினியை ரூ.100-க்கு மேல் விற்கக் கூடாது என மத்திய அரசு உச்ச வரம்பு நிர்ணயித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவி வருவதால், கைகழுவும் கிருமி நாசினி திரவம், முக கவசம் ஆகியவற்றுக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு வர்த்தகர்கள் இவற்றை அதிக விலைக்கு விற்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, இவற்றின் விலையைக் கட்டுப்படுத்தவும் பதுக்கலை தடுக்கவும் கிருமி நாசினி மற்றும் முக கவசம் ஆகியவற்றை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்ப்பதாக மத்திய அரசு இந்த மாத தொடக்கத்தில் அறிவித்தது.

இந்நிலையில், மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “கிருமி நாசினி திரவம் மற்றும் முக கவசங்களுக்கான மூலப்பொருள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த விலை உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 200 மி.லி. கிருமி நாசினியின் அதிகபட்ச விலை ரூ.100 ஆக நிர்ணயிக்கப்படுகிறது. 2 அடுக்கு முக கவசத்தின் விலை ரூ.8 ஆகவும் 3 அடுக்கு முக கவசத்தின் விலை ரூ.10 ஆகவும் நிர்ணயிக்கப்படுகிறது. வரும் ஜூன் 30-ம் தேதி வரை இந்த விலை உச்சவரம்பு அமலில் இருக்கும்” என கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x