

வசுந்தரா ராஜேவுக்கு நடத்தப்பட்ட கரோனா தொற்று சோதனையில் அவருக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கரோனா ரைவஸ் தொற்று இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. கனிகா கபூர் மார்ச் 9-ம் தேதி லண்டனில் இருந்து மும்பை திரும்பியுள்ளார். பின்னர் அவர் லக்னோ சென்றுள்ளார். லக்னோவில் நடந்த விருந்து நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்றுள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் அரசியல் பிரபலங்கள், சினிமா நடிகர், நடிகைகள் என 100 பேர் கலந்து கொண்டுள்ளனர். கனிகா தான் லண்டனில் இருந்து வந்ததையும், தனக்கு கரோனா தொற்று சோதனை நடந்ததா என்பதையும் யாரிடமும் கூறவில்லை எனக்கூறப்படுகிறது.
அந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் வசுந்தரா ராஜேவும் கலந்து கொண்டார். இதையடுத்து அவர் முன்னெச்ரிக்கையாக தன்னை தானே தனிமைப்படுத்திக் கொள்ள முடிவெடுத்துள்ளார். இதுபோலவே அவரது மகன் துஷ்யந்தும் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக அறிவித்தார்.
இதனால் கனிகா கபூர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசியல் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் என அனைவருக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் வசுந்தரா ராஜேவுக்கு நடத்தப்பட்ட கரோனா தொற்று சோதனையில் அவருக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘கரோனா வைரஸ் சோதனை முடிவுகளின்படி எனக்கு தொற்று ஏற்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது. இதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனினும் அடுத்த 15 நாட்களுக்கு நானும் எனது மகனும் முன்னெச்சரிக்கையாக எங்களை தனிமைப்படுத்திக் கொள்கிறோம்’’ எனக் கூறியுள்ளார்.