Published : 21 Mar 2020 06:02 PM
Last Updated : 21 Mar 2020 06:02 PM

கரோனா முன்னெச்சரிக்கை: எம்.பி. நிதியில் இருந்து பரூக் அப்துல்லா ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு

ஸ்ரீநகர்

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளுக்காக தனது எம்.பி. தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் வழங்குவதாக தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கரோனா வைரஸ் பரவலில் இந்தியா தற்போதும் 2-ம் கட்டத்தில் இருப்பதால், அதற்குள் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவித்த மத்திய அரசு, திரையரங்குகள், மக்கள் கூடுமிடங்கள், ஷாப்பிங் மால்கள் போன்றவற்றை வரும் 31-ம் தேதிவரை திறக்கத் தடை விதித்தது.

மேலும், வரும் 22-ம் தேதி மக்கள் தாமாக முன்வந்து சுய ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். மார்ச் 22-ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தநிலையில் காஷ்மீ்ர் மாநிலத்தில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா ஒரு கோடி ரூபாய் தனத தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து வழங்கியுள்ளார்.

இதுகுறித்து தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், ஸ்ரீநகர் தொகுதி எம்.பி.யுமான பரூக் அப்துல்லாவின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளதாவது:

எம்.பி. தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் வழங்குவதாக தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இதில் ஸ்ரீநகர் பகுதிக்காக 50 லட்சம் ரூபாயும், பட்காம் பகுதிக்காக 25 லட்சம் ரூபாயும், கந்தர்பால் பகுதிக்காக 25 லட்சம் ரூபாயும் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x