

கேரளாவில் அடுத்த 2 வாரங்களுக்கு அரசு ஊழியர்கள் பகுதி நேரமாக பணியாற்றினால் போதும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கரோனா வைரஸ் பரவலில் இந்தியா தற்போதும் 2-ம் கட்டத்தில் இருப்பதால், அதற்குள் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவித்த மத்திய அரசு, திரையரங்குகள், மக்கள் கூடுமிடங்கள், ஷாப்பிங் மால்கள் போன்றவற்றை வரும் 31-ம் தேதிவரை திறக்கத் தடை விதித்தது.
மேலும், வரும் 22-ம் தேதி மக்கள் தாமாக முன்வந்து சுய ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். மார்ச் 22-ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனிடையே கரோனா வைரஸ் மகாராஷ்டிரா மற்றும் கேரள மாநிலங்களில் கூடுதலாக பரவி வருகிறது. இதனால் அங்கு கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கேரளாவில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் ஒருபகுதியாக கேரளாவில் அடுத்த இருவாரங்களுக்கு அரசு ஊழியர்கள் பகுதி நேரமாக பணியாற்றினால் போதும் என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். அம்மாநிலத்தில் மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குதல் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை அம்மாநில அரசு எடுத்து வருகிறது.