Published : 21 Mar 2020 08:47 AM
Last Updated : 21 Mar 2020 08:47 AM

கரோனா வைரஸ் தொற்றை தடுக்க வழிகாட்டும் மத்திய அரசின் இணையதளம்

மத்திய சுகாதாரத் துறையின் இணையதளத்தில், கரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வழிமுறைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், உதவி எண்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்திகள்பரவி வருகின்றன. இதனால் பொதுமக்கள் மத்தியில் குழப்பமும் பீதியும் ஏற்படுகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர், உயிரிழப்புகள் குறித்தும் தவறான தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதை தவிர்க்க மத்திய சுகாதாரத் துறை தனது www.mohfw.gov.in இணையதளத்தில் கரோனா வைரஸ் காய்ச்சல் தொடர்பான முழு விவரங்களையும் வெளியிட்டுள்ளது. இந்த வைரஸ் தொடர்பாக தேசிய உதவி எண் 91-11-23978046 மற்றும் ncov2019@gov.in இ-மெயில் முகவரியில் ஆலோசனைகளைப் பெறலாம். அனைத்து மாநிலங்களின் உதவி எண்களும் இதே இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

தமிழக மக்கள் 044-29510500 என்ற எண்ணிலும் புதுச்சேரிமக்கள் 104 எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

கரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது. தேவையில்லாமல் வெளியில் நடமாடக்கூடாது. பயணங்களை தவிர்க்க வேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும் என்பன உள்ளிட்ட அனைத்து அறிவுரைகளும் வழிகாட்டு நெறிகளும் இணையத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் நோயாளிகளை, மருத்துவமனைகள் எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்தும் விரிவான விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

உலகளாவிய அளவில் கரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, இந்தியாவில் எத்தனை பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது. எந்தெந்த மாநிலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். உயிரிழந்தோர் விவரம், குணமடைந்தோர் விவரம் என அனைத்து விவரங்களும் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

வதந்திகளால் குழப்பம்

சமூக வலைதளங்களில் வெளியாகும் வதந்திகளை பார்த்து குழப்பம் அடையாமல் மத்திய சுகாதாரத் துறையின் அதிகாரபூர்வ இணையத்தில் வெளியாகும் உண்மை தகவல்களை அறிந்துவிழிப்புடன் இருக்குமாறு மூத்தஅதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த இணையதளத்தில் அனைத்து விவரங்களும் ஆங்கிலத்தில் உள்ளன. அந்தந்த மாநிலங்களின் மொழியில் அவற்றை மொழியாக்கம் செய்து வெளியிட்டால் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றுசமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x