Published : 20 Mar 2020 04:44 PM
Last Updated : 20 Mar 2020 04:44 PM

மக்கள் ஊரடங்கு; நாளை மறுதினம் டெல்லியில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம்

நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமையன்று டெல்லியில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகில் இதுவரை 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். 2.50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலும் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

எனினும் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மெல்ல உயர்ந்து வருகிறது. பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் மக்கள் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள், பொழுதுபோக்கு பகுதிகள் என அனைத்தும் மார்ச் 31-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.

ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்ற வேண்டும் என தனியார் நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. மத்திய அரசு ஊழியர்களும் சுற்று அடிப்படையில் வீடுகளில் இருந்து பணியாற்ற கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்தநிலையில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில் வரும் 22-ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் "ஜனதா ஊரடங்கு" பிறப்பிக்கப்படுகிறது. மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமையன்று முழு அளவில் மக்கள் வீடுகளில் இருக்கும் வகையில் பல மாநில அரசுகள், தனியார் நிறுவனங்கள் என பல தரப்பிலும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமையன்று டெல்லியில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் ‘‘ஜனதா ஊரடங்கு உத்தரவு நடவடிக்கையின் ஒரு பகுதியாக டெல்லி மெட்ரோ ரயில் சேவை நிறுத்தி வைக்கப்படுகிறது. கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை காக்கவும், அன்றைய தினம் மக்களை வீடுகளிலேயே இருக்கச் செய்யவும் இந்த நடவடிக்கையை மெட்ரோ ரயில் நிர்வாகம் எடுத்துள்ளது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x