Published : 20 Mar 2020 02:09 PM
Last Updated : 20 Mar 2020 02:09 PM

‘‘மக்களால் புறக்கணிக்கப்பட்ட மகாராஜாவின் பதவி ஆசை’’- சிந்தியா மீது கமல்நாத் கடும் தாக்கு

தேர்தலில் நின்று மக்களால் புறக்கணிக்கப்பட்ட மகாராஜா தனது பதவி ஆசையால் ம.பி. காங்கிரஸ் அரசைக் கவிழ்த்து விட்டார் என ஜோதிராதித்ய சிந்தியாவை கமல்நாத் கடுமையாக தாக்கி பேசினார்.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா அக்கட்சியில் இருந்து அண்மையில் விலகி பாஜகவில் இணைந்தார். இதன்தொடர்ச்சியாக, அவரது ஆதரவாளர்களான 6 அமைச்சர்கள் உட்பட 22 எம்எல்ஏக்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை வழங்கினர்.

இதனால் பெரும்பான்மை இல்லாத சூழலில் முதல்வர் கமல்நாத் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முன்வரவில்லை. இதையடுத்து
இந்த சூழலில், மத்திய பிரதேச சட்டப்பேரவையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய பிரதேச சட்டப்பேரவையில் சிறப்புக் கூட்டத்தொடரை இன்று கூட்ட வேண்டும் என்றும், மாலை 5 மணிக்குள்ளாக அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இதன்படி இன்று பிற்பகல் ம.பி. சட்டப்பேரவைக் கூட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக முதல்வர் கமல்நாத் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆளுநர் மாளிகைக்கு சென்ற அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் லால்ஜி டாண்டனிடம் ஒப்படைத்தார்.

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கமல்நாத் கூறியதாவது:

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை கவிழ்ப்பதற்காக பாஜக எத்தனை கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தது என்பதை அனைவரும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். தேர்தலில் நின்று மக்களால் புறக்கணிக்கப்பட்ட மகாராஜா (ஜோதிராதித்ய சிந்தியா) தனது பதவி ஆசையால் 22 எம்எல்ஏக்களை கைக்குள் வைத்துக் கொண்டு இந்த அரசை கவிழ்த்துள்ளார். மக்கள் அவருக்கும், பாஜகவுக்கும் தகுந்த பாடம் புகட்டுவார்கள். மாநிலத்தின் வளர்ச்சிக்கு பல திட்டங்களை செயல்படுத்த தொடங்கினோம். ஆனால் எதையும் செய்து முடிக்க பாஜக விடவில்லை.’’ எனக்கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x