Last Updated : 20 Mar, 2020 01:27 AM

 

Published : 20 Mar 2020 01:27 AM
Last Updated : 20 Mar 2020 01:27 AM

உயர் நீதிமன்றம் நிராகரிப்பு: கடைசிநேர வாதமும் தோல்வி: வெள்ளி்க்கிழமை அதிகாலை 5.30 மணிக்குள் நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை


நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரின் அனைத்து சட்ட வாய்ப்புகளும் முடிந்த நிலையில் நேற்று மாலை மீண்டும் உயர் நீதிமன்றத்தின் கதவைத் தட்டினர்.

இரவுவரை நீடித்த வாதத்தில் தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க நீதிமன்றம் மறுத்துவிட்டதால், வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்குள் குற்றவாளிகள் 4 பேருக்கும் திஹார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது

நிர்பயா வழக்கில், தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி, குற்றவாளிகள் 4 பேரும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மாலை இறுதிவாய்ப்பாக முறையீடு செய்தார்கள்.

குற்றவாளிகளில் முகேஷ் சிங், பவன் குப்தா, அக்சய் சிங், வினய் சர்மா ஆகியோர் தாக்கல் செய்த 2-வது கருணை மனுக்களையும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு நேற்று அடுத்தடுத்து தள்ளுபடி செய்தது. தூக்கு தண்டனயை நிறுத்தி வைக்கக் கோரி டெல்லி விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவையும் நீதிபதி தர்மேந்திர ராணா தள்ளுபடி செய்தார்.

இதனால், வெள்ளிக்கிழமை காலை திஹார் சிறையில் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழலில் மீண்டும் கடைசி வாய்ப்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று மாலை குற்றவாளிகள் 4 பேரும் மேல்முறையீடு செய்தார்கள்.

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி மன்மோகன் தலையிலான அமர்வு முன் இரவு 10 மணிக்கு விசாரிக்கப்பட்டது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் ஏ.பி.சிங் ஆஜராகினார். அப்போது நீதிபதி மன்மோகன் சிங் “ இந்த மனுவைத் தாக்கல் செய்ய அனுமதி பெற்றீர்களா” எனக் கேட்டார்.

அதற்கு வழக்கறிஞர் ஏ.பி.சிங், “ கரோனா வைரஸ் காரணமாக என்னால் நகல்ஏதும் எடுக்கமுடியவில்லை” எனத் தெரிவித்தார்
அதற்கு நீதிபதி மன்மோகன்சிங் “ இன்று ஒரேநாளில் 3 நீதிமன்றங்களில் வாதாடிவிட்டீர்கள். தண்டனையை நிறுத்துவது சாத்தியமா, உங்களால் வாதிட முடியாது.

நீங்கள் முறையிட்டதால் இரவு 10 மணிக்கு விசாரிக்கிறோம். இந்த வழக்கில் மனுதாரர்கள் கோரிக்கையை விசாரிக்க எந்தவிதமான ஆவணங்களும் இல்லை, பிரமாணப்பத்திரம் இல்லை, இணைப்பு ஏதும் இல்லை .இதை நிராகரிக்கிறோம். அதுமட்டுமல்லாமல் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உங்கள் வாதங்களை ஏற்க மறுத்துவிட்டது. இப்போது உச்ச நீதிமன்றத்தை மீறி எங்களால் தீர்ப்பு எவ்வாறு வழங்க முடியும் அதனால் தள்ளுபடி செய்கிறோம்” எனத் தெரிவித்தனர்

இதையடுத்து, வெள்ளிக்கிழமை(20-ம் தேதி) காலை 5.30மணிக்குள் நிர்பயா குற்றவாளிகள் 4பேருக்கும் திஹார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கிடையே நள்ளிரவே உச்ச நீதிமன்றத்தின் கதவைத் தட்டுவேன் என்று மனுதாரர்களின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் நிருபர்களிடம் தெரிவித்துச் சென்றார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x